வெள்ளி, 30 செப்டம்பர், 2016

ஆய்வுச் சுற்றம் சிறப்பிதழ்கள்



ஆசிரியர் பக்கம்


                                                                                                                                        ஆய்வுச் சுற்றம் தனது பணியை மிக உற்சாகமாகத் தொடர்கிறது.  இப்பகுதியில்  சிறப்பிதழ்கள் உருவாக்கப்பெற்று உங்கள் பார்வைக்கு வருகின்றன. உளவியல் தொடர்பான கட்டுரைகளை இவ்விதழில் வெளிவருகின்றன. இவை உளவியல் குறித்து ஆராய்பவர்களுக்குப் பெருந்துணை புரியும்.                                                                                                                                                                                                                                

                                                                                                                                                 ஆய்வுச் சுற்றம்   சிறப்பிதழ் -1                  September 10/2016                       
உள்ளே                                                                                                                             

1. பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்  பாடல்கள்

                                                                 - முனைவர் மு. பழனியப்பன்

2.தமிழில் உளவியல் திறனாய்வு: தோற்றமும் வளர்ச்சியும் -  ஒரு வரலாற்று நோக்கு - 

                                                                      சு.இளங்கோ

 3. பெண்ணிய நோக்கில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள். 

                                                                   - முனைவர் மு. பத்மா                                                            

வெள்ளிவீதியார் பாடல்கள் பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்

முனைவர் மு. பழனியப்பன் - இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

 à®µà¯†à®³à¯à®³à®¿ வீதியார் க்கான பட முடிவு

 

சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமைக்கும், பிற பெண்பால் புலவராலும் அறியப்பெற்றவர் என்ற பெருமைக்கும் உரியவராக விளங்குபவர் வெள்ளிவீதியார் ஆவார். இவர் பாடியனவாகப் பதிமுன்று பாடல்கள் சங்க இலக்கியப் பகுதியில் கிடைக்கின்றன. அகநானூற்றில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் எட்டு பாடல்களும், நற்றிணையில் முன்று பாடல்களும் ஆக பதிமுன்று பாடல்கள் இவர் பாடியனவாகக் கிடைக்கின்றன. 

இவற்றில் நான்கு பாடல்கள் பாலைத்திணை சார்ந்தவை. முன்று பாடல்கள் குறிஞ்சித் திணை சார்ந்தவை. மருதத்திணை, நெய்தல் திணை ஆகியவற்றுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடாத திணை முல்லைத் திணை மட்டுமே ஆகும். இதற்கும் அடிப்படையான காரணம் உண்டு. முல்லைத்திணை பெரும்பாலும் கற்பு வாழ்க்கை சார்ந்தது. இக்கற்பு வாழ்வினைப் பெறாதவர் வெள்ளிவீதியார் என்பதன் காரணமாக இத்திணை விடுக்கப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

இவர் பாடிய பாடல்களில் பலவற்றைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்று துறைக் குறிப்பாளர்கள் துறை வகுத்துள்ளனர். இவர் பாடிய நற்றிணையின் முன்று பாடல்களும் காமம் மிக்கக் கழிபடர் கிளவித் துறை சார்ந்தனவாக உள்ளன. இவரின் காதல் நிறைவேறாமையின் வெளிப்பாடு இவரின் பல பாடல்களிலும் இவர் பற்றி பிறர் பாடிய பாடல் குறிப்புகள் வாயிலாகவும் தெரிய வருகிறது.

இவ்வகைப்பட்ட பாடல்களைப் பாடியுள்ள வெள்ளிவீதியாரின் பாடல்கள் பெண்ணிய உளவியல்படி சிந்திக்கத் தக்கனவாக உள்ளன. இவ்வழியில் சித்திக்கின்றபோது இதுவரை வெள்ளிவீதியார் பாடல்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெற வேண்டியனவாக உள்ளன.

பெண்ணிய உளவியல் ஓர் அறிமுகம்

பெண்ணிய உளவியல் என்பது பெண் மனதை மையமாக வைத்து, அவளின் நடத்தைகளை எடுத்தறிவிப்பது ஆகும். பெண்களாலேயே உணரப்படும் பெண் மன இயல்புகள் பற்றிய கூறுகளை உட்கொண்டிருப்பது பெண்ணிய உளவியல் ஆகும். இது பற்றிய மேரை நாட்டார் விளக்கங்கள் பின்வருமாறு.

"பெண்ணிய உளவியல் என்பது சமுகக்கட்டமைப்பினையும், பால் வேறுபாட்டினையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் உளவியல் அமைப்பாகும். வரலாற்று அடிப்படையில் ஆண்பால் சார்புடைய உளவியலில் பிறந்ததாக இது இருந்தாலும், இந்தக் கூறு ஆண்களின் உளவியல் சிந்தனைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிய உருக்களில் இருந்தும் தனிப்பட்டு பெண்கள் பற்றிய உளவியல் ஆய்வுகளைத் தொடங்குவதாக உள்ளது.

பெண்ணிய உளவில் என்பது பெண்களுக்கான சரிசமமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தனித்த அழுத்தத்தைத் ஏற்படுத்தித் தருகின்றது

மேற்காட்டிய இரண்டு கருத்துக்களும் பெண்ணிய உளவியலின் நோக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள உதவுகின்றன. ஆண் சிந்தனை வயப்பட்ட உளவியல் பகுதியைப் பெண் வழிப்பட்டதாக மாற்ற எழுந்ததுவே பெண்ணிய உளவியல் ஆகும்.

இதனை முதன் முதலாக உருவாக்கிய உளவியலாளர் பிராய்டின் உளவியல் பள்ளியின் வழிவந்த நியோ பிராய்டியன் எனப்படும் காரென் ஹார்னி என்ற பெண்ணியலாளர் ஆவார். இவரே பிராய்டு பெண் உளவியல் பற்றிக் கூறிய அடிப்படைக் கருத்தான ஆண் குறி இழப்புப் பொறாமை என்பதற்கு மாற்றாக வோப் என்வி எனப்படும் கருப்பை இழப்புப் பொறாமை என்பதனைக் கொண்டு வந்தவர்.

அதாவது பெண் குழந்தையானது இளவயதில் தனக்கு ஆண்குறி இல்லையே என்ற எண்ணத்தின் காரணமாகப் பொறாமைப்பட்டு அதன் காரணமாக உளவியல் அடிப்படையில் தயக்கம் பெறுவதாக பிராய்டு கருதினார். ஆனால் பெண்ணியல் உளவியல் அறிஞர்கள் ஆணுக்கும் இழப்பு, பொறமை ஆகியன இருக்கின்றன. அந்தப் பொறாமையின் காரணமாகவே பெண்களை ஆண்கள் அடிமையாக்க முற்படுகிறார்கள் என்று கருத்துரைத்தனர். 

குறிப்பாக ஆணுக்கு மார்பக இழப்புப் பொறாமை, கருப்பை இழப்புப் பொறாமை, பெண்குறி இன்மைப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை போன்ற பல பொறாமைகள் இருப்பதன் காரணமாக அவர்களுக்குள் பாதிப்பு ஏற்படுகின்றது என்று பெண்ணியலாளர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாகப் பெண்களை அவர்கள் அடக்கி வைக்க முற்படுகின்றனர் என்பது இவர்கள் கண்டறிந்த முடிவாகும்.

ஹார்னி கரென் இது பற்றிக் கூடுதல் விளக்கம் தருகிறார். கருப்பை பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகிய சொற்கள் பெண்ணிய உளவியல் சார்புடையனவாகும். இயற்கையாக ஆணுக்குப் பெண் மீது வெளிப்படுத்தமுடியாத அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக அவளது உயிரியல் இயக்கங்களான மகப்பேறு, மகப்பேற்றுக்கான தயாரிப்பு முயற்சிகள், பாலூட்டல் போன்றன குறித்த அச்சங்கள் ஆண்களிடம் ஏற்படாமை கருதி ஒரு புதிர்த்தன்மையை அவை ஆண்களுக்குள் ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பெண்களை அடக்கி வைக்கவும், ஆண்கள் தங்களின் இருப்பை, தங்களின் பெயர்களை முன்வைக்கவும் ஆன செயல்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர். என்ற இக்குறிப்பின் வழியாக பெண்கள் அடக்கப்பட்டதற்கான முக்கியக் கூற்றினைப் பெண்ணிய உளவியல் அறிந்து சொன்னது.

குறிப்பாகப் படைத்தல் என்ற தொழில் உயிரியல் அடிப்படையில் பெண்களின் தனித்த இயல்பாக உள்ளது. இந்த உயிர்ப் படைப்பாற்றல் அவர்களின் இலக்கியப் படைப்பாக்கத் திறனிற்கும் முல காரணியாக உள்ளது.

ஆனால் உயிரியல் அடிப்படையில் வெளித் தோன்றும் வகையில் படைப்புத் தொழிலைச் செய்யும் பெண்களை இலக்கியப் படைப்பாக்கத்தில் ஆண்கள் பின்தள்ளி விடுகின்றனர். ஆண்கள் அதிக அளவில் இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபடுவதும், ஈடுபட்டதும், பெண்களைப் படைப்பாக்கத்தில் இறங்கவிடாமல் புறவேலைகளை அதிகப்படுத்துவதுமான முயற்சிகளும் இப்பின்தள்ளுதலின் அடையாளங்கள் ஆகும். 

மேலும் பெண்கள் உயிர்ப் படைப்பாக்கத்திற்கான தனி வாய்ப்பைப் பெற்றிருப்பதாலும் அவர்களின் படைப்பாக்க முயற்சி அதனுடன் சமப்படுத்தப்பட்டு விடுகிறது. இவ்வகையில் பெண்களின் படைப்பாக்க முயற்சிகளை புரிந்து கொள்ள பெண்ணிய உளவியல் உதவி செய்கின்றனது.

குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் உயிர்ப்படைப்பாக்கத்தினை எட்டாத பெண்களே இலக்கியப் படைப்பாக்கங்களை அதிகம் புனைய முன்வந்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தி, பெருங்கோழியூர் நாய்கன் மகள் நக்கண்ணையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்ற பெண்களின் வாழ்வில் குழந்தைப் பிறப்பு என்பது அறவே இல்லாமல் இருப்பதையும் எண்ணிப் பார்க்கையில் இக்கருத்துச் சரியென மெய்ப்படும்.

வெள்ளிவீதியார் அகவாழ்வில் காதல் தோல்வியைச் சந்தித்தவர் என்பது அவர் குறித்த ஔவையாரின் பதிவு வாயிலாகவும், வெள்ளிவீதியாரின் பதிவு வாயிலாகவும் அறியப் பெறுகின்றன.

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை

வெள்ளிவீதியைப் போல நன்றும்

செலவு அயர்ந்திசினால் யானே (அகநானூறு : 147:8)

என்ற ஔவையாரின் அகநானூற்றுப் பாடலின் வாயிலாக வெள்ளிவீதியார் காதலனைத் தேடி அலைந்தமை தெரிய வருகின்றது.

மேலும் வெள்ளிவீதியாரின் பின்வரும் பாடலில் அவர் ஆதிமந்தியைப் போலக் காதலனைத் தேடி அலைந்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது.

ஆதிமந்தி போலப் பேதுற்று

அலந்தனென் உழல்வென் கொல்லோ

(அகநானூறு 5: 1415)

மேலும் இவரது குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இச்சாயலில் உள்ளது.

நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரின்

கெடுநரும் உளரோ நம் காதலோரே( குறுந்தொகை 30)

என்ற இப்பாடலின் வாயிலாக வெள்ளிவீதியாரின் அகவாழ்க்கை பற்றிய செய்திகள் தெரியவருகின்றன.

வெள்ளிவீதியார் தன் அகவாழ்வில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இதற்கு அடிப்படைக் காரணம் தலைவனைச் சேராமையே ஆகும். தலைவன் ஏன் வெள்ளிவீதியாரைச் சந்திக்க மறுத்தான். அவரைத் திருமணம் செய்ய ஏன் மறுத்தான் இதுபோன்ற பல கேள்விகள் இப்பாடல்களின் பின்னணியில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பெண்ணிய உளவியல் அடிப்படையில் பதிலைத் தரவேண்டியுள்ளது. வெள்ளிவீதியார் என்ற பெண் உயிர்ப் படைப்பாக்க இயல்புகளையும், இலக்கியப் படைப்பாக்க இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக அவரிடம் இருக்கும் கூடுதல் தகுதிகள் வெள்ளிவீதியாரால் விரும்பப்பட்ட தலைவனுக்கு ஒரு விதமான ஐயத்தை, அச்சத்தை, அதாவது தனக்கு இப்பெண் அடங்கி நடப்பாளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் காரணமாக அத்தலைவன் இவரை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று முடிய முடிகின்றது. இதற்குப் பல சான்றுகளும் இவர்தம் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. அவை பற்றிச் சிந்திக்கும் களமாக அடுத்த பகுதிகள் அமைகின்றன.

காதலின் முதல் நிலை

தலைவனைக் கண்ட தலைவி ஒருத்தி புன்னகைக்கிறாள். இந்தக் காதல் குறிப்பினை உணர்ந்த தலைவனும் அவளுடன் காதல் கனிகின்றான். சிறிது நாளில் தலைவியின் காதலைப் புறக்கணித்து விடுகிறான். இதன் காரணமாகத் தலைவி வருத்தமடைகிறாள்.

அவள் தலைவனுக்குக் காதல் குறிப்புரைத்த பற்களைப் பார்த்து பற்களே நீங்கள் பாலை நிலத்தின் வழியில் செல்லும் யானையின் தந்தங்கள் கல்லில் பட்டு முனை மழுங்கி அழகொழிந்து காணப்படுவதைப் போல ஆவீர்கள் என்று கூறுகிறாள். மேலும் தலைவனின் காதல் தலைவியின் உள்ளத்துள் பாணர்கள் பச்சை மீன்களைப் பிடித்துச் சுமந்து செல்லும் மண்டை எனப்படும் பாத்திரத்தில் நீங்காது மீன் வாசனை இருப்பதுபோல நீடித்து இருக்கிறது. இது எமக்குப் புலவியைத் தருகிறது. மேலும் தலைவனையும் பெற இயலவில்லை. எம் உயிரும் அழிந்து போகப்போகிறது என்று இப்பாடல் பொருளுணர்த்துகிறது.

இந்த உவமைக் குறிப்பு சற்று நினைக்கத்தக்கதாகும். பெண்களின் உணவறிவை இப்பாடல் எடுத்துரைப்பதாக உள்ளது. இப்பாடல் வழியாக வெள்ளிவீதியாரின் மனநிலையையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

எமக்கும் பெரும்புலவாகி, எம்உயிர் என்பன போன்ற தன்மைப் பன்மைச் சொற்கள் படைப்பாளரையும் உளப்படுத்துவனவாகும். எனவே இங்குக் காட்டப்படும் தலைவி நாடகப் பாங்கில் கற்பனையாகவும், உலகியல் வழக்கில் வெள்ளிவீதியாரைக் குறிப்பதாகவும் உள்ளதை உணரமுடிகின்றது. இப்பாடல் பின்வருமாறு.

சுரம்செல் யானைக் கல்லுறு கோட்டின்

தெற்றென இரீஇயரோ ஐய மற்று யாம்

நும்மொடு நக்க வால்வெள் எயிறே

பாணர் பசுமீன் செறிந்த மண்டைபோல

எமக்கும் பெரும் புலவு ஆகி

நும்மும் பெற்றேஎம் இறீஇயர் எம்உயிரே (குறுந்தொகை 169)

காதலின் வளர்ச்சி

சிரிப்பில் மலர்ந்த காதல் இரவுக் குறிச் சந்திப்பில் வளர்ச்சி பெறுகிறது. தலைவன் பல இடர்களைக் கடந்துத் தலைவியைச் சந்திக்க வருகிறான். ஆனால் நிலவு வெளிப்பாடு காரணமாக தலைவியும் தலைவனும் சந்திக்க இயலவில்லை. தலைவி வருத்தம் மிகக் கொள்கிறாள்.

ஆறுகள் மழைநீராலும், தேன் பொழிவாலும் நிறைந்து ஓடுகின்றன. இவற்றில் பாம்புகளும் இழையும். மலைக் குகை ஒன்றில் யானையால் தாக்கப் பெற்ற ஆண்புலி ஒன்று கிடக்க அதனைக் காக்கும் வண்ணமாகப் பெண்புலி குகையின் வாயிலில் தங்கிக் கிடக்கும் வழியாக அந்த வழி உள்ளது. இம்மலை வழியில் தலைவன் வேல் ஒன்றேந்தித் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவனின் சந்திப்பு நிகழாவிட்டால் நான் வாழமாட்டேன். நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுது யான் வாழலேனே:(அகநானூறு 362 : 910) என்ற இப்பாடலடியில் உள்ள யான் என்ற தன்மைக் குறிப்பு கருதத்தக்கது. இது படைப்பாளரின் உளத்தையும் சுட்டுவது என்பது முன்னரே சுட்டப் பெற்றதாகும்.

இச்சூழலில் தலைவனின் காதல் வளம் பெற்றது. என்றபோதும் அது நிறைவடையவில்லை.

தலைவன் இல்லாப் பொழுதுகளில் வருத்த மிகுதி

தலைவனின் அன்பு வயப்பட்ட தலைவி அவனின் அருகாமை வேண்டி நிற்கிறாள். அது கிடைத்த பாடில்லை. அவனுடன் இருந்த மாலைப் பொழுதையும், அவனுடன் இல்லாத மாலைப் பொழுதையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். அணிகூட்டும் மாலையோ அறிவேன், மன்னே மாலை நிலம்பரந்தன்ன புண்கணோடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே ( குறுந்தொகை 386: 46) மகிழ்வான மாலையை அறிந்தவள் தனிமைத் துயரால் வருத்தப்படும் மாலைப் பொழுதை வெறுக்கிறாள். 

இதுபோன்று இரவில் தலைவன் துணையின்றி தலைவி அழுகிறாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டிப் பொருள் தேடிப்பிரிகின்றான். அவன் சென்றதன் காரணமாக அலர் எழுந்தது. இது ஆதிமந்தியின் அல்லலுற்ற நிலையை ஒத்திருந்தது. வானவரம்பனின் படையினர் வரவால் தூங்காது உள்ள ஊர் மக்களைப் போல நானும் உறங்காமல் உள்ளேன் என்று தலைவி கலங்குகிறாள். (அகநானூறு 45)

இவ்வாறு தலைவனின் பிரிவு தலைவியாகிய வெள்ளிவீதியாருக்குத் துன்பத்தைத் தந்துள்ளது. பிரிந்த தலைவன் கடைசிவரை வராது ஒழிந்தான்.

காமவேகம்

வாராது ஒழிந்த தலைவன் தந்த காதல் நோய் தலைவிக்கு காமத்தை விளைவித்தது. இதனைத் தாங்க இயலாது அவள் தவிக்கின்றாள். இந்த அடிப்படையில் வெள்ளிவீதியாரின் பல பாடல்கள் அமைந்துள்ளன. காம வேகத்தை வெளிப்படுத்தும் தன்மை பெண்களுக்குப் பெரும்பாலும் இல்லை என்ற பொதுக் குறிப்பை இப்பாடல்கள் பொய்யாக்குகின்றன.

வெள்ளிவீதியார் பாடல்களில் கூற்று நிலையில் பல தடுமாற்றங்கள் நிலவுகின்றன. பின்வரும் பாடல் தலைவன் கூற்றாகப் பெரும்பாலும் பல உரையாளர்களால் இனம் காணப்பட்டது. அது பிறழ உணரப்பட்டதாகும்.

இடிக்கும் கேளீர் நும்குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமண் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல்போலப்

பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே

( குறுந்தொகை 58)

இப்பாடல் தலைவன் கூற்றாகப் பலரால் இனம் காணப் பெற்றது. இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொள்ளுதலைவிட தலைவி கூற்றாகக் கொள்ளுதல் பொருத்தமாகவும் வெள்ளிவீதியார் தம் ஏனைய பாடல்களோடு இசைந்தும் அமையும் என்று கருதுகிறார் தாயம்மாள் அறவாணனர். அவரின் கருத்தே கட்டுரையாளருக்கும் ஏற்புடையதாகும்.

இப்பாடலில் தலைவியின் காம வேகம் அதிகரிக்க அதனை இடித்துரைக்கின்றனர் உறவினர்கள். இருப்பினும் அவள் காம வேதனைப்படுகிறாள். காய்ந்த கல் பரப்பில் வைக்கப் பெற்ற வெண்ணெய் வெப்பத்தால் உருகி ஓடும்போது கையில்லாத ஊமண் ஒருவனால் எப்படித் தடுக்க முடியாதோ அதுபோல் காமத்தைத் தலைவியால் தடுக்க இயலவில்லையாம். இவ்வுவமைப் பகுதியில் கையாளப் பெற்றுள்ள வெண்ணெய் உவமை பல வகை ஒப்புமை உடையதாகும்.

பெண்ணின் காமத்தைத் தடுத்து நிறுத்துவதாக நாணம் விளங்குகின்றது. இருப்பினும் அந்நாணமும் தோற்றுப் போய்விடும் அளவிற்குத் தலைவியின் காதல் பெருகுகிறது.

அளிதோ தானே நாணம் நம்மொடு

நனிநீடு உழந்தன்று மன்னே இனியே

வான்புங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைத்

தீம்புனல் நெரிதர வீந்து உக்கா அங்குத்

தாங்கும் அளவைத் தாங்கிக்

காமம் நெரிதர கைநில்லாதே (குறுந்தொகை 149)

என்ற பாடலில் வெள்ளத்தினைக் கட்டுப் படுத்தும் கரையில் உள்ள கரும்புகளும் மிகு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுபோல காமமானது நாணத்தையும் புறந்தள்ளிக் கொண்டு போய்விடுமோ என்று கலங்குகிறாள் தலைவி. காமத்தின் அளவு கைநில்லாத அளவிற்கு உள்ளதாக இத்தலைவி கருதுகிறாள். ஏறக்குறைய வெள்ளிவீதியாரின் நிலையும் இதுவேயாகும்.

யாமம் உய்யாமை நின்றன்று

காமம் பெரிதே களைஞரோ இலரே

(நற்றிணை 335, 1011)

என்ற பாடலடிகள் யாமப் பொழுதில் பெருகும் காமத்தைப் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. பெண் காமம் பெரிது. அதனை முற்றாகக் களைபவர் யாரும் இல்லை என்பதைக் குறிப்பதாக இப்பாடலடிகள் விளங்குகின்றன.

அன்றில் பறவைகளின் கூச்சல், யாழ் ஒலி போன்றன காம வேதனையை மிகுவிப்பனவாக இப்பாடலில் சுட்டப் படுகின்றன. இப்பாடலிலும் என்புறம் நரலும் என்ற நிலையில் தன்மைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதுவும் வெள்ளிவீதியாரின் அகவாழ்வு வெளிப்பாடு என்பதற்கு இக்குறிப்பு சான்று நல்கும்.

உலகினர் இரவில் நிலவின்பம் தூய்க்கின்றனர். பிரிவால் வாடும் தலைவி மட்டும் அழுது கொண்டு நிற்கிறாள்.

யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு

கனைஇருங் கங்குலும் கண்படை இலனே

அதனால் என்னொடு பொரும்கொல் இவ்வுலகம்

உலகமொடு பொரும்கொல் என்அவலம் உறு நெஞ்சே

(நற்றிணை 348:710)

என்ற இப்பாடலில் வளையிழந்து அவலமுறும் தலைவியின் காட்சி இடம் பெறுகிறது. தன்னோடு உலகு பொருந்தாமையையும், உலகோடு தான் பொருந்தாமையையும் தலைவி இப்பாடலில் எடுத்துரைக்கிறாள்.

பெண்ணிய நிலையில் ஆண்மைய உலகிற்கும், பெண்ணுக்கும் உள்ள முரண்பாட்டைத் தெற்றெனக் காட்டுவதாக மேற்கண்ட பாடலின் அடிகள் விளங்குகின்றன.

குருகின் தூது

காதலால் அதன் தோல்வியால் தலைவனை அடையமுடியாத தலைவி தன் துயரத்தைச் சொல்லிடக் குருகினைத் தூதாக அனுப்புகிறாள். உலகத்தோடு பகை வந்துவிட்டபின் அஃறிணைப் பொருள்களை மட்டுமே நம்ப இயலும். அந்த அளவில் இந்தப் பாடல் முக்கியமானதாகும்.

என் ஊருக்கு வந்துபோகும் சிறு வெள்ளாங்குருகே! என்நிலையை என்தலைவனிடம் கூறுக என்பதே இப்பாடலின் பொருள். கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன் இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே (நற்றிணை 70) என்று விளிக்கிறாள் தலைவி.

இவ்வகையில் பல நிலைகளில் துயருற்ற வெள்ளிவீதியாரால் படைக்கப் பெற்ற தலைவியின் பாடல்கள், அல்லது வெள்ளிவீதியார் தம் தன்னனுவப் பாடல்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன.

1.    தலைவி காதல் வயப்பட்டுப் பின் காமத்தின் அளவைத் தாங்க முடியாதவளாக உள்ளாள்

2.    அவளை மணக்கப் பொருள் தேடிப் போனத் தலைவன் திரும்ப தலைவியை நோக்கி வந்தானில்லை.

3.    தலைவியைக் கண்டும், இரவுக் குறியில் தன் காதலை வளப்படுத்தியும் வந்த அவனின் அன்பு இல்லாமையால் தலைவி பெரிதும் வருத்தமுற்றுள்ளாள். உடல் அளவிலும், மனஅளவிலும் அவளின் வருத்தம் அதிகரித்துள்ளது.

4.    ஊரும் இதனை அலராக உணர்த்தியது. இதன் காரணமாக ஊரின் மீது தலைவி பகை கொண்டாள். ஊரும் அவள் மீது பகை கொண்டது.

5.    இதனைத் தீர்க்க இயலாமல் தலைவி அஃறிணைப் பொருள்களைத் தூதாக விட்டுள்ளாள்

6.    வெள்ளிவீதியார் பாடல்களில் பல தன்மைக் குறிப்புகள் காணப்படுவதால் அவை படைப்பாளரின் சொந்த அனுபவ வெளிப்பாடு எனக் கொள்வதில் தவறில்லை.

 

இவை இப்பாடல்கள் தரும் பொதுக் கருத்துக்கள் ஆகும். இக்கருத்துக்கள் வழியாகத் தலைவன் தலைவியின் காம இயல்பு கண்டும், கேளீர் கண்டும் இது போன்ற பல இடர்பாடுகள் கண்டும் அவளை மணக்க முன்வரவில்லை என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக வெள்ளிவீதியாரின் தலைவி அல்லது வெள்ளிவீதியார் பெரிதும் பாதிக்கப் பெற்றுள்ளாள்/ர். அவன் வராமைக்குக் காரணம் என்ன என்பது தெளிவிக்கப் பட வேண்டும்.

இதற்கு வெள்ளிவீதியார் தரும் பதில் பின்வரும் பாடலாகும். இப்பாடல் பெண்ணிய உளவியல்படியான பெண்குறிப் பொறாமை சார்ந்த பாடலாகும். ஆணுக்குப் பெண்ணின் குறி மீதான சில புதிர்களும், அச்சமும் நிலவின என்பது ஒரு புறம். பெண்களுக்குத் தங்களின் புற அடையாளங்கள் மீதான பெருமைத்தன்மை இருந்துள்ளது என்பது மறுபுறம். இந்த மறுபுறத்தை இப்பாடல் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு

எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என்மாமைக் கவினே. 

( குறுந்தொகை, 27)

பசு மாடு பால்தரத் தக்கது. அப்பசுமாட்டின் பால் கலத்திலும் சேர்க்கப்படாது, கன்றுக் குட்டியாலும் உண்ணப்படாது வீணே நிலத்திற்கு செல்வதாகக் கொண்டால் அதனால் யாருக்கும் பயன் விளையாது. அது போல வரிகள் கொண்டு விளங்குகின்ற, மாந்தளிர் போன்ற பரப்பினையும் அழகினையும் உடைய அல்குல் பசலை நோயால் அதன் கவினை அழிந்தது என்பது பாடலின் பொருளாகும்.

பெண்ணிய உளவியல் கருதும் பெண்குறிப் பொறாமை என்பது இதனுள் விளங்குகிறது. பெண்களின் குறி பற்றிய தெளிவான வெளிப்பாடாக இது அமைகிறது. இதனின் அழகு குலைவது பற்றியதான விவரங்கள் இப்பாடலில் அமைந்துள்ளன. பெண்ணுக்குத் தன் உடல் கூற்றின் மேல் ஏற்பட வேண்டிய அழகுணர்ச்சியை இது காட்டுகின்றது.

மேலும் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் புகட்டல் குறித்தும் ஆண்களுக்குப் புதிர் ஏற்பட்டுள்ளது. இப்புதிர்த் தன்மை இப்பாடலில் பால் என்னும் உவமையாக வெளிப்பட்டுள்ளதை உணரவேண்டும். பால் தருவது பசுமாடு. அது பெண் வகைப்பட்டது. அதே சூழல் வாய்ந்த பெண்ணின் வளமையையும் இது குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே பெண்ணியலாளர்கள் கருதும் கருப்பை பொறாமை, தாய்ப்பால் அளிக்கும் பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகியனவற்றைச் சுமந்ததாக இந்தப் பாடல் விளங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

பெரும்பாலும் தற்கால தமிழ்ச் சொல் வழக்குகளில் ஒரு ஆண் மற்றொரு ஆணைத் திட்ட முற்படும்போது தேவையில்லாமல் பெண் அவயங்களைப் பற்றி, குறிப்பாக அவளின் குறி பற்றிய இழி சொற்கள் இடம் பெறுகின்றன. இவை ஆணுக்கு உள்ள பெண் குறி பற்றிய பயத்தைப் புதிரை வெளிப்படுத்துவதே ஆகும்.

இதுபோன்றதொரு அச்சம், அதன் வகையில் தோன்றிய பெண் அடங்குவாளா மாட்டாளா என்ற ஐயம் வெள்ளிவீதியாரைக் காதலித்த தலைவனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். குழந்தையைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், இலக்கியத்தைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், அலரால் உலகால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஆகிய சூழல்களைக் கொண்டவளைத் தனக்குக் கீழ் இருக்கச் செய்வது இயலாத செயல் என்று கருதியே அத்தலைவன் வெள்ளிவீதியாரின் காதலைப் புறக்கணித்திருக்க வேண்டும்.

குறிப்பாக காதல் தோல்வி பெற்ற ஆண்கள் அது பற்றிய சிந்தனையைப் பெரும்பாலும் பலரறிய வெளிப்படுத்துவர். பெண்கள் அப்படிச் செய்வது இல்லை. ஆனால் இங்குக் காதல் தோல்வி ஏற்பட்ட பெண் ஒருத்தி தன்னைப் பற்றி வெளிப்படுத்தியிருப்பது தமிழ்க் களத்தில் புதுமை வாய்ந்ததே ஆகும்.

வெள்ளிவீதியாரின் பாடல்களை பெண்ணிய உளவியல் கண்ணோட்டத்துடன் காணுகையில் இத்தகைய புதிய செய்திகளுக்கு அவை இடம் தருகின்றன என்பது வியப்பளிக்கின்றது.

முடிவுகள்

1. பெண்ணிய உளவியல் நிலையில் ஆண்களுக்குச் சில பொறாமைகள் இயற்கையாகப் பெண்கள் குறித்து அமைந்துள்ளன. பெண்களின் உடல் வெளிப்பாடுகளான, உயிரியல் தோற்றங்களான தாய்மைப்பேறு, பால்கொடுத்தல் போன்றன ஆண்களுக்குப் புரியாத தன்மையை ஏற்படுத்தி நிற்கின்றன.

2. பெண்கள் தன் உடல் பற்றி அவற்றின் இயல்புகள் பற்றிப் பெருமைப் பட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு வெள்ளிவீதியார் பாடல்கள் சான்று பகர்கின்றன.

3. தலைவன் ஒருவன் காதலித்த காதலியைப் புறக்கணிப்பதற்கு அவளின் உடல் குறித்தான புரிதல் இன்மையும், அவளின் அகம் பற்றிய புரிதல் இல்லாமையும், இவை கருதித் தோற்றமும் அச்சமும் காரணமாக அமையலாம்.

 

பயன் கொண்ட நூல்கள்

1. ஔவை நடராசன், புலமைச் செவ்வியர், தி பார்க்கர் சென்னை 14.

2. சுப்பிரமணியன். ச.வே., சங்கஇலக்கியம், முன்று தொகுதிகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010

3. தாயம்மாள் அறவாணன், மகடுஉ முன்னிலை, பச்சைப் பசேல், சென்னை, 29 2004

4. நாகராசன். வி. (உரையாசிரியர்), குறுந்தொகை, என்சிபிஎச், சென்னை, 2004

5. இணைய தளம்: விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம்.

 

 ---------------------------------------------------------------------------------------------

 

தமிழில் உளவியல் திறனாய்வு: தோற்றமும் வளர்ச்சியும் -  ஒரு வரலாற்று நோக்கு

சு.இளங்கோ, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார் அரசு கலைக்கல்லூரி,கடலூர்-1 

 à®‰à®³à®µà®¿à®¯à®²à¯ க்கான பட முடிவு

     பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சிக்மண்ட் ஃபிராய்ட் (1856 – 1939) தோன்றியிருக்கா விட்டால் உளவியல் துறை இன்னமும் தத்துவத் துறையின் பிரிவுகளுள் ஒன்றாகவே இருந்திருக்கும்.  ஃபிராய்டின் வரவு உளவியல் துறையை அறிவியல் கண்கொண்டு ஆய்வதற்குப் பெரும் உதவியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.  மனித மனத்தின் நடத்தைகளுக்கு, இயல்பு பிறழ்ந்த நடத்தைகளுக்கு அவனின் குழந்தைப் பருவ பால்சார் உணர்வுகளே பிரதான காரணமாக விளங்குகின்றன என்பதைத் தமது மனநோய் ஆய்வுகளின் (Case Histories) வழிக் கண்டறிந்தார்.  அவ்வாறு தாம் கண்டறிந்த வழிமுறைகளுக்கு ஃபிராய்ட் உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) முறை என்றழைத்தார்.  உளவியலில் தனிப் பிரிவாக விளங்கியது உளப்பகுப்பாய்வு.  இப்பிரிவை மென்மேலும் கார்ல் குஸ்தவ் யூங், ஆல்ஃபிரட் அட்லர், காரல் அப்ரஹாம், ஆட்டோ ரேங், பெர்ன் ஹீம், ஏர்னஸ்ட் ஜோன்ஸ், வில்ஹெம் ரெய்க் போன்றோர் சிறப்பாக வளர்த்தெடுத்தனர்.  இவ்வெழுத்துரை தமிழில் உளப்பகுப்புத் திறனாய்வுத் துறையின் வரலாற்றினை இங்குச் சுட்டமுற்படுகிறது.

தமிழில் உளவியல் திறனாய்வின் தோற்றம்

            உலகெங்கிலும் உளவியல் கோட்பாடு பல புலங்களைத் தாக்கியது.  அந்த வகையில் ஃபிராய்டின் உளவியல் கோட்பாடு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணியது.  

            ஆங்கிலத்தில் ரெனிவெல்லாக் & ஆஸ்டின் வாரன் எழுதி, குளோறியா சுந்தரமதி மொழிபெயர்த்துப் பாரிநிலையத்தாரால் வெளியிடப்பெற்ற ‘இலக்கியக் கொள்கை’ (குளோறியா சுந்தரமதி (மொ.ர்), ரெனிவெல்லாக் & ஆஸ்டின் வாரன், இலக்கியக் கொள்கை, 1966) எனும் நூல் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.  மேற்கத்திய இலக்கியத் திறனாய்வுச் சிந்தனைகளைத் தமிழில் தந்த நூல்களில் இது குறிப்பிடத்தக்கதாகும்.  இது தமிழ்த்திறனாய்வு உலகில் திருப்பத்தை ஏற்படுத்திய ஒன்றாகும்.  தமிழ்த் திறனாய்வு உலகில் இந்நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்நூலில் ‘இலக்கியமும் உளவியலும்’ என்ற கட்டுரை தொடக்கக் காலத் தாக்கத்தை உருவாக்கியது.

             தமிழவன் என்று அழைக்கப்படும் கார்லோஸ் எழுதிய ’தற்காலத் தமிழிலக்கியத்தில் ஃபிராய்டிசம்’, 1972 இக்கட்டுரை தமிழ் உளவியல் வரலாற்றில் முதல் நிலை/தொடக்க நிலைக் கட்டுரையாகும். (கார்லோஸ் ச. (க.ஆர்), “தற்காலத் தமிழிலக்கியத்தில் ஃபிராய்டிசம்”, 1972).  தமிழ்ப் படைப்புலகில் ஃபிராய்டின் கோட்பாடு எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது எனபதை விளக்கும் கட்டுரையாகும்.  குறிப்பாகத் தமிழ் நாவல் உலகில் லா.சா.ராமாமிர்தம், மௌனி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திராபார்த்தசாரதி ஆகியோர் தம் படைப்புக்களில் ஃபிராய்டிசத்தின் தாக்கம்  எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரையாகும்.

            பிறகு வை. சச்சிதானந்தம் எழுதியுள்ள ஒப்பிலக்கியம்: ஓர் அறிமுகம் (1985) நூலில் இலக்கியமும் உளவியலும் (Psychology and Literature) என்ற தலைப்பில் மிகவிரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும்  ஆங்கிலத்தில் நியுட்டன் பி.ஸ்டால்நெட்ச் & ஹார்ஸ்ட் ஃபிரான்ஸ் ஆகியோர் இணைந்து எழுதிய ஒப்பிலக்கியம்: அணுகுமுறையும் அமைப்பும் (Comparative Literature: Method and Perspective 1961), உல்ரிச் வைஸ்டனால் எழுதப்பட்ட ‘ஒப்பிலக்கியமும் இலக்கியக் கொள்கையும்’ (Comparative Literature and Literary Theory 1973),  ஆகிய நூல்களின் தழுவலாகும். உண்மையில் இந்நூல் தமிழிலக்கியத் திறனாய்வு உலகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.  அன்றைய காலகட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் கேரளா, சென்னைப்பல்கலைக்கழகம் முதலியவற்றில் தமிழ் இலக்கியம், ஒப்பிலக்கியம் ஆகிய துறைகளில் இந்நூல் முதுகலைக்குப் பாடநூலாக வைக்கப் பெற்றது.  இதற்குப் பிறகுதான் உளவியல் / உளப்பகுப்பாய்வுத் திறனாய்வுப் புலம் தமிழ்க் கல்விப் புலத்தில் தோற்றம் கொள்கிறது எனலாம்.

அடுத்து மீனாட்சி முருகரத்தினம் எழுதிய ‘மேலை இலக்கியத் திறனாய்வு அறிமுகம்’ (1987) நூலில் உளவியல் திறனாய்வு பற்றிக் குறிப்பிட்டுச் செல்கின்றார்.  இது உளவியல் திறனாய்வு வரலாற்றில் ஒரு சுட்டத்தக்க பணியாகும்.  அக்கட்டுரை அறிமுக நிலையில் இருந்தாலும் அன்று இருந்த சூழலுக்கு அது முக்கியப் பணியாகும்.

மேலும் தமிழண்ணல் எழுதிய ஒப்பிலக்கிய அறிமுகம் (மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1985) என்ற நூலில் சிறிது அளவில் உளவியல் திறனாய்வு தொட்டுக் காட்டப்பட்டது.

தஞ்சைப் பல்கலைக் கழக ஆறு இராமநாதனின் ‘வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை: அறிமுகமும் ஆய்வுகளும்’ (தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு, தஞ்சாவூர், 1988) என்ற நூல் தமிழில் நாட்டுப்புற வழக்காறுகளை உளப்பகுப்பாய்வுப் பார்வை கொண்டு ஆராய்வதற்குக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.  இந்த நூலில் நிட்டூரிகதையை ஆறு இராமநாதன் ‘வரலாற்று நிலவியல் ஆய்வு’ முறையில் ஆய்வு செய்து சில கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை காண இயலவில்லை என்று தெரிவித்து இருந்தார்.   அவ்வாய்வுக் கட்டுரையைக் கண்ணுற்ற அரங்க நலங்கிள்ளி அவ்வினாக்களுக்கு உளப்பகுப்பு இலக்கியத் திறனாய்வு அடிப்படையில் விடை தர இயலும் என்று கூறி அவ்வினாக்களுக்கான விடைகளை உளப்பகுப்பாய்வு அடிப்படையில் தந்தார்.  அதுவே பிற்காலத்தில் ‘மறைக்கப்பட்ட இடிப்பஸ் அமைப்பு (ஃபிராய்ட், நிட்டூரி கதை)’ என்ற நாட்டுப்புற உளப்பகுப்பாய்வுக் கட்டுரையாக இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் (1992, பக்.78.93) என்ற நூலில் வெளிவந்தது.  தமிழில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் எழுதப்பட்ட முதல் உளப்பகுப்பாய்வுத் திறனாய்வுக் கட்டுரை இதுவேயாகும்.  இதற்குப் பின்புதான் தி.கு. இரவிச்சந்திரன் போன்றோர் நாட்டார் வழக்காற்றியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தினர்.  அவர்கட்கெல்லாம் இந்தக் கட்டுரை பெரும் தூண்டுதலாக இருந்தது என்று தெளிவாகக் கூறலாம்.  தி.கு. இரவிச்சந்திரனைப் பிற்காலத்தில் உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு நோக்கில் நாட்டார் வழக்காற்றியல் தரவுகளில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்த வைத்தது எனலாம்.

இதன் பின்புதான் தமிழின் நாட்டார் வழக்காற்றுத் துறையும் உளப்பகுப்பாய்வுத் துறையும் (Folklore and Psycho-Analysis) ஒன்றையொன்று சார்ந்து வளரத் தொடங்கின.   உளப்பகுப்பாய்வுத் திறனாய்வுப் புலத்திற்குத் தேவையான தரவுகளை நாட்டார் வழக்காற்றியல் துறையும்,  நாட்டார் வழக்காற்றியல் துறைக்குத் தேவையான கோட்பாடுகளை உளப்பகுப்பாய்வுத் திறனாய்வுத் துறையும் வழங்கி ஒன்றையொன்று சார்ந்தும் தாக்குற்றும் வளரத் தொடங்கின.  அதுவரை நாட்டார் வழக்காற்றியல் துறையில் தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தித் தரக்கூடிய விளக்கமுறை சார்ந்த ஆய்வுகளும், சமூகவியல் திறனாய்வு விளக்க ஆய்வுகளும், நிலவியல் வரலாற்று முறை ஆய்வுகளும் தாம் நிகழ்த்தப் பெற்றன.   ஒருசில குறிப்பிட்ட ஆய்வு வட்டங்களிலேயே நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் உழன்று கொண்டிருந்தன.  இதன் பின்புதான் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுத் துறையில் ஊடறுப்பு ஒன்று நிகழ்ந்து ஒரு பெரும் திறப்பு ஏற்பட்டது.

இதற்கு வேறு முக்கிய சிலகாரணங்களும் இருந்தன.  நாட்டார் வழக்காற்றியல் துறையைச் சார்ந்த அறிஞர் தே லூர்து, ஆறு இராமநாதன், முதலானோர் நாட்டார்  வழக்காற்றியல் தரவுகளைப் பன்முகக் கோட்பாட்டுத் திறனாய்வு நோக்கில் ஆராய்ச்சியை மேற்கொண்டு தமிழாராய்ச்சி உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றனர்.  இதன் விளைவாக இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து தமிழாய்வுலகில் புதிய ஆய்வுப் புலங்கள் உருவாகின என்று கூறலாம்.

குறிப்பாக தே. லூர்து அவர்கள் இத்தகைய ஆய்வுப்போக்குகளைத் தமிழாய்வு அரங்கச் சூழல்களில் பெரிதும் வரவேற்றுப் பேசி அதற்கான ஆதரவுகளையும் ஆர்வங்களையும் ஆய்வாளர்களிடையே உருவாக்கினார்.  இதனால் தமிழ் கூறும் ஆய்வுலகம் சற்றே நிமிர்ந்து வேகமெடுக்கத் தொடங்கியது.  இதனால் தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரு ‘புதிய அலை’ உருவாகத் தொடங்கியது என்று கூறலாம்.  அதுவரை தமிழாராய்ச்சி உலகில்  நாட்டார் வழக்காற்றியல் துறை ஒரு தீண்டத்தகாத துறையாக இருந்தது என்றால் அது மிகைக்கூற்றல்ல.  பன்முகக் கோட்பாட்டுத் திறனாய்வு வருகையினால் பல மொழி, இலக்கியப் புலங்களும், திறனாய்வுப் புலங்களும் தேக்கநிலையிலிருந்து விடுபட்டு சிற்சிறு நதிகளாக ஓடத்தொடங்கின.  இத்தகைய ஆய்வு நூல்களை எழுதிய பலபேருக்கு அவர் எழுதிய அணிந்துரைகள், விமரிசனங்கள், கட்டுரைகள் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தின.  ஆய்வுகளை வளர்த்தெடுத்தன.   ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற இதழை இதற்காகவே பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரி நிறுவனத்தில் தொடங்கி நடத்தி வந்தார் என்பது இங்குப் பதியத் தக்க ஒன்றாகும்.  இவ்விதழில் பன்முகக் கோட்பாடு சார்ந்த பல கட்டுரைகள் எழுதப் பெற்று வெளிவந்தன.  பல பல்கலைக்கழகங்களில் இவ்விதழ் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

பிறகு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கதிர் மகாதேவன் எழுதிய தொன்மம்-இந்தியப் புரான வகைகள் ஒப்பாய்வு, (இலட்சுமி வெளியீடு, மதுரை,  இரண்டாம் பதிப்பு 1989) என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  தொன்மவியல் ஆய்வினை வளர்த்தெடுக்க இந்த நூல் உதவியது எனலாம்.

 அடுத்து தமிழவன் எழுதியுள்ள இன்னொரு கட்டுரை மிகமுக்கியமானது.  ஆண்டாளின் திருப்பாவையை அமைப்பியல் நோக்கில் ஆய்வு செய்து எழுதப்பட்ட கட்டுரையாகும்.  (அக்கட்டுரை அரங்கில் படிக்கப்பட்டபோது கட்டுரையை முழுவதுமாகப் படிப்பதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தமிழவன் ஆண்டாள் பாடல்களைப் பற்றி எவ்வாறு ஆய்வு செய்யலாம்?  என விவாதம் நடந்தததாகச் செய்தி ஒன்று உண்டு. ஆய்வு என்பது நடுநிலைத்தன்மை கொண்டது என்பது ஆய்வுநெறிமுறைகளில் சுட்டப்படுகின்ற ஒன்று.  சாதி, மதம், இனம், மொழி என்ற எல்லைகளைக் கடந்தது ஆய்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதைப்பற்றி எல்லாம் இங்குக் கவனிப்பாரில்லை. ஒருவேளை அக்கட்டுரையின் அமைப்பியல் ஆய்வில் ஃபிராய்டிய ஆய்வும் இருந்திருக்கலாம்(காண்க: தமிழவன், திருப்பாவை ஓர் அமைப்பியல் ஆய்வு, ‘மேலும்’ (சிற்றிதழ்), நவம்பர்,1989.)  இந்தக் கட்டுரைக்கு வந்த அன்றைய தமிழ் ஆய்வுலகின் எதிர்வினைகள் அக்காலத் தமிழ்த் திறனாய்வுப்புல நிலையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

திறனாய்வு அணுகுமுறைகள்(1989)

பகவதி அவர்களால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட 'திறனாய்வு அணுகுமுறைகள்' தமிழ்த் திறனாய்வு உலகில் திறனாய்வு அணுகு முறைகளை அறிமுகப்படுத்தி வைத்த நூல்களில் மிக இன்றியமையாத கட்டுரைத் தொகுப்பு நூலாகும் இது (பகவதி. கு, திறனாய்வு அணுகுமுறைகள் (தொ.ர்), 2007 மறுபதிப்பு).  27 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு நூலாகும் இது (ஆய்வாளருக்குப் பழைய பதிப்பு ஆண்டு கொண்ட நூல் கிடைக்க வில்லையாதலால் 2007 மறுபதிப்பு ஆண்டு கொண்ட நூல் இங்கு ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது).  இலக்கியத் திறனாய்வு அணுகு முறைகளைத் தமிழ்த் திறனாய்வு உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது இத்தொகுப்பு.  அழகியல் அணுகுமுறை, அறவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, கட்டமைப்பு நீக்கவியல் அணுகுமுறை, குறியீட்டியல் அணுகுமுறை, தொன்மவியல் அணுகுமுறை, நடையியல் அணுகுமுறை, மார்க்சிய அணுகுமுறை, மொழியியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை முதலான திறனாய்வு அணுகுமுறைகள் இந்நூலில் அறிமுக நோக்கில் எழுதப்பட்டுள்ளன.  இவற்றுள் 10 கட்டுரைகள் உளவியல் திறனாய்வுக் கட்டுரைகளாகும்.  1989-ல் எழுதித் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் 10 கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.  இதுமட்டுமின்றி உளவியல் திறனாய்வுப் புலத்தில் இந்த நூலில் 10 கட்டுரைகள் எழுதப்பட்டதை வைத்தே உளவியல் திறனாய்வுக்கு மிகுந்த வரவேற்பு அக்காலத்தில் இருந்திருப்பதை உணர முடிகிறது.

            தா.ஏ. சண்முகம் எழுதிய 'தமிழ் இலக்கியத்தில் உளவியல்' (மேலது நூல்.பக்.89-98) என்ற கட்டுரை, அ.நா. பெருமாள் எழுதிய 'இலக்கியத் திறனாய்வில் உளவியல் அணுகுமுறை' (மேலது நூல்.பக்.99-106) என்ற கட்டுரை, க.த. திருநாவுக்கரசுவின் உளவியல் 'அணுகுமுறை' (மேலது நூல்.பக்.107-124) என்ற கட்டுரை, (செல்வி) அன்னிதாமசுவின் 'உளவியலும் தொன்மவியலும்' (மேலது நூல்.பக்.125-138) என்ற கட்டுரை, அவரின் மற்றொரு, கட்டுரையான 'கற்பனையும் தொல்லுருவும்' (மேலது நூல்.பக்.139-152) குறிக்கத்தக்கன.  மேலும், கு.பகவதி எழுதிய 'உயர்வு-தாழ்வு மனப்பான்மை' (மேலது நூல்.பக்.153-162) 'தலைவியர் உளவியல்' (மேலது நூல்.பக்.177-190) என்ற இரண்டு கட்டுரைகள் பொதுவானவை.  அடுத்து வி.சி. சசிவல்லி எழுதியுள்ள 'உளவியல் நோக்கில் திருப்பாவை' (மேலது நூல்.பக்.163-176) என்ற கட்டுரை கார்லோஸிற்குப் பிறகு உளப்பகுப்பாய்வு நோக்கில் திருப்பாவையில் எழுதப்பட்ட மற்றொரு கட்டுரையாகும்.  அடுத்து தே.ஆல்பட் எழுதியுள்ள 'உளவியல் அணுகுமுறையில் முதிர்ந்த எண்ணங்கள்'  (மேலது நூல்.பக்.191-200) என்ற கட்டுரை உளவியல் கோட்பாட்டினைக் கொஞ்சம் ஆழமாக விளக்குகின்ற கட்டுரையாகும். தே. ஆல்பட்டின் மற்றொரு கட்டுரையான தொன்மவியல் அணுகுமுறை  (மேலது நூல்.பக்.259-274) என்ற கட்டுரை ஆகியன உள்ளன.

 இவற்றுள் உளவியல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளை அடிப்படைகளாக வைத்தே எழுதப் பட்டுள்ளன.  ஃபிராய்டியச் சிந்தனை என்று வந்து விட்டாலே அது உளப்பகுப்பாய்வு என்பதைத்தான் குறிக்கும்.  ஆனால் இதனைப் பிரித்து உணராமல் அந்தக்காலத்தில் உளவியல் என்ற பொதுச் சொல்லையே பயன்படுத்தி அறிமுகப்படுத்தி எழுதி வந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வின் வழி அறியமுடிகிறது.

            இத்தொகுப்பில் உள்ள தே.ஆல்பட்டின் உளவியல் அணுகுமுறையில் முதிர்ந்த எண்ணங்கள் என்ற கட்டுரை உண்மையில் ஃபிராய்டியச் சிந்தனையையும், லெக்கானியச் சிந்தனையையும் ஒருங்கிணைத்த ஒரு நல்ல கட்டுரையாகும்.   என்றாலும் இந்தக் கட்டுரையின் தலைப்பும் உளவியல் என்ற பொதுச் சொல்லையே பயனபடுத்தி எழுதப்பட்டுள்ளது இங்குப் பதியத் தக்கது.

செல்வி அன்னிதாமசு எழுதியுள்ள உளவியலும் தொன்மவியலும் என்ற கட்டுரை யூங்கிய அடிப்படையில் எழுதப்பட்டாலும் முழுமையான யூங்கிய இலக்கியத் திறனாய்வைச் சார்ந்தது அல்ல.  யூங்கியத்தின் மூலப்படிவக் கோட்பாட்டினைத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓரளவிற்குப் புகுத்திக் காட்டியுள்ளது என்று கூறலாம்.  இவரின் அடுத்த கட்டுரையான கற்பனையும் தொல்லுருவும் என்ற கட்டுரை யூங்கிய மூலப்படிவத் திறனாய்வைத் தமிழ் இலக்கியத் தளத்தில் புகுத்திப் பொருத்திக் காட்டிப்  பல்வேறு சான்றுகளைத் தந்து எழுதப்பட்ட முதல் யூங்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும்.

            கு. பகவதி எழுதியுள்ள உயர்வு-தாழ்வு மனப்பான்மை பொது உளவியல் சிந்தனையை அடியொற்றி எழுதப்பட்டது எனலாம்.

             சி.இ. மறைமலையின் இலக்கியமும் உளவியலும் (1991) இவ்வுளவியல் திறனாய்வுப்புலத்தில் குறிப்பிடத்தக்க நூலாகும். இந்நூல் ஃபிராய்டின் கோட்பாடுகளை ஓர் அறிமுக நோக்கில் கூறுகிறது.  ஃபிராய்டின் கலை இலக்கியச் சிந்தனைகளைக் கூறி அவற்றிற்கான மறுப்புக்களையும், வாதப் பிரதிவாதங்களையும்  முன்வைக்கின்றது.   ஃபிராய்டை மறுத்த யூங், லியோனல் டிரில்லிங் முதலானோர்களின் மறுப்புவாதங்களைத் தந்து ஹான் ஷஷ் போன்றோரின் கருத்துக்களையும் தந்து செல்கிறது.  சி.இ. மறைமலை மார்க்சீயத் திறனாய்வு பற்றி எழுதி வந்தாலும் இலக்கியத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பினை அடிப்படையாக  உளவியல் திறனாய்வு பற்றியும் எழுதி நூலாக வெளியிட்டுள்ளது இப்புலத்திற்கு அவர் செய்துள்ள குறிப்பிடத் தக்க ஒரு பணியாகும்.

பூரணிச்சந்திரனின் அமைப்பு மையவாதமும் பின் அமைப்புமையவாதமும் (1991)               க. பூரணிச்சந்திரன் எழுதியுள்ள 'அமைப்பு மையவாதமும் பின்-அமைப்பு வாதமும்' (1991) என்ற நூலில், அமைப்புமைய வாதத்தை விளக்குகின்ற நூலாசிரியர் 16 பக்கங்களை அதற்கு ஒதுக்குகின்றார்.  ஆனால் அவ்வமைப்பியல் வாதத்தில் ஃபிராய்டியத்தைப் பேசவில்லை.  அடிப்படையில் ஃபிராய்டியமும் அமைப்பு மையவாதமாகத்தான் கருதப்படுகிறது. மார்க்சும், ஃபிராய்டும் அமைப்புவாதிகளே ஆவர்.  ஆனால் இவர்களைப் பற்றியும் இவர்களின் கோட்பாடுகளையும் பற்றி பூரணிச்சந்திரன் இத்தலைப்பில் பேசாதது ஏனோ தெரியவில்லை.  மார்க்சியம், ஃபிராய்டியம் இவற்றுக்கு அமைப்புவாதத்திற்கு நெருங்கிய தொடர்பிருக்கிறது.  'மார்க்சியமும் பிராய்டியமும் வற்புறுத்துவது போலவே அமைப்பு மையவாதமும் தோற்றங்களுக்கும் மெய்மைக்கும் தொடர்ச்சி இன்மையை வலியுறுத்துகின்றன’ (மேலது,ப.42) என்றெல்லாம் பேசுகின்ற பூரணச்சந்திரன் ஃபிராய்டியத்தையும் மார்க்சியத்தையும் அமைப்பு மையவாதத்துக்குள் வைத்துப் பேசாமல், விவரிக்காமல் அக்கட்டுரையை நிறைவு செய்கின்றார்.  பின்-அமைப்பு வாதத்தை விளக்க வருகின்ற பொழுது, முதலில்  லக்கானின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விளக்கிச் (மேலது,பக்.60-80) செல்கின்றார். லக்கானுக்கு அடிப்படை நாதமாகத் திகழ்பவர் ஃபிராய்டே ஆவார். ஃபிராய்டைத் தவிர்த்துவிட்டு லெக்கானைப் பேசுவது சரியான வாதமாக அமையாது.  அமைப்புவாதத்தை விளக்கும் பொழுது ஃபிராய்டியம் எவ்வாறு அமைப்புவாதமாகத் திகழ்கின்றது என்பதைச் சுட்டிப் பின்பு லக்கானியத்தை விளக்கியிருந்தால் எளிமையாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். ஆனாலும் 1991-ல் லெக்கானைத் தமிழுக்கு அறிமுகப் படுத்துகின்ற கட்டுரையாக (பக்.60-80) இது அமைகின்றது எனலாம்.  ஃபிராய்டிடமிருந்து எவ்வாறு லக்கான், கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டு விரிவுபடுத்துகின்றார் என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையாகும் இது.  லெக்கான் தன் உளப்பகுப்பாய்வுக்கு அடிப்படையாக ஃபிராய்டின் நனவிலிக் கருத்தாக்கத்தையும், இடிப்பஸ் கருத்தாக்கத்தையும் சசூரின் மொழியியல் கருத்தாக்கத்தையும் ஒப்புமைப்படுத்திப்  பயன்படுத்தி விளக்குவதைப் பூரணிச்சந்திரன் தன் கட்டுரையில் சுருக்கமாக விளக்குகின்றார்.  எனினும் அறிமுக நிலையில் இருக்கின்ற வாசகர்களுக்கு இக்கட்டுரை எளிய வாசிப்புத் தன்மையினைக் கொடுக்காது என்றே கூறலாம்.

அரங்க நலங்கிள்ளி:

            தமிழில் இலக்கிய உளப்பகுப்புத் திறனாய்வுப் புலத்தில் இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் என்ற தொடரைப் பயன்படுத்திப் பரவலாக்கியவர் இவரே.  இன்னும் சொல்லப்போனால் 'உளப்பகுப்பாய்வு' (Psycho-Analaysis) என்ற சொல்லைத் திறனாய்வுக் கல்விப்புலத்தில் பின்பற்றுவதற்குக் காரணமானவராக இருந்தவரும் இவரே.  தென்னிந்திய உளப்பகுப்பாய்வுத் திறனாய்வினைத் தோற்றுவித்தவரும், பிதாமகருமான இவர் இப்புலத்தில் பல கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி செழுமைப்பட அதனை வளர்த்தெடுத்துள்ளார் என்று கூறலாம்.  அதோடு  உளப்பகுப்பாய்வுத் திறனாய்வில் ஆய்வு செய்ய வரும் முனைவர்ப்  பட்ட ஆய்வாளர்களையும், இளமுனைவர்ப்  பட்ட ஆய்வாளர்களையும் மிகச்சிறந்தமுறையில் ஆய்வுகளை நிகழ்த்த வைத்து இத்திறனாய்வுப் புலத்தை மென்மேலும் வளர்த்தெடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரைகளும் நூல்களும் பின் வருமாறு.

1.‘இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் உளவியல் ஆய்வுக்கட்டுரைகள்’       என்ற நூல் 1992-ல் வெறும் இருபது ரூபாய்க்கு வாணிதாசன் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இத்திறனாய்வுப் புலத்தில் முதன்முறையாக எழுதப்பட்ட இந்நூல் கீழ்க்கண்ட ஆறுகட்டுரைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

அதாவது, 1.இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் 2. தமிழ் இலக்கியத்தில் மூலப்படிய மாதிரிகள் 3. இச்சை உணர்ச்சியின் உயர்வழிப்பாடு 4 வி – நாயக மூலப்படிவம் 5. நெற்றிக்கண் படிமம் 6. மறைக்கப்பட்ட இடிப்பஸ் அமைப்பு முதலியன.  இவற்றில் இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் 2. இச்சை உணர்ச்சியின் உயர்வழிப்பாடு1 3. நெற்றிக்கண் படிமம் 4. மறைக்கப்பட்ட இடிப்பஸ் அமைப்பு முதலியன ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு வகையைச் சார்ந்தன. மீதம் இரண்டு கட்டுரைகளான தமிழ் இலக்கியத்தில் மூலப்படிவ மாதிரிகள், வி – நாயக மூலப்படிவம் ஆகிய இரண்டும் யூங்கிய உளவியல் திறனாய்வு வகையைச் சார்ந்தவையாகும்.  தமிழில் எழுதப்பட்ட முதல் யூங்கியக் கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரையாகும்.  வி-நாயக மூலப்படிவம் என்ற கட்டுரை தமிழில் இலக்கியங்களில் யூங்கியக் கோட்பாட்டைப் பொருத்திக்காட்டி எழுதப்பட்ட திறனாய்வுக் கட்டுரையாகும். 

  முதல் கட்டுரையாக உள்ள - இலக்கியமும் உளப்பகுப்பாய்வும் 'Literature and Psychoanalysis' என்ற சொற்றொடரின் மொழிபெயர்ப்பாகும். இத்தலைப்பில் ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

              அடுத்து இவர் எழுதிய 2. 'ஃபிராய்டின் கலை இலக்கிய உளப்பகுப்பாய்வு (1999)' எனும் நூலில் முதல் கட்டுரையாக  ஃபிராய்டின் கலை இலக்கிய உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளின் சாராம்சத்தை மிகச்சுருக்கமாகத் தந்து உள்ளார்.  அடுத்து நரம்பு நோயும் கலை இலக்கிய மருத்துவமும் எனும் தலைப்பில் நரம்பு நோயையும், கலை இலக்கியப் படைப்பாக்கத்தையும் ஒப்பீடு செய்து, கலை இலக்கிய வெளிப்பாடு, படைப்பாளனின் மன இறுக்கத்தை எங்ஙனம் தவிர்க்க உதவுகின்றது? என்பதற்கான ஃபிராய்டிய விளக்கத்தை மிகச் சிறப்பான முறையில் தந்து, சாதாரண நரம்பு நோயாளிக்கும் படைப்பாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையும்  மிக அழகாக ஃபிராய்டிய அடிப்படையில் விளக்கிச் சென்றுள்ளார். இறுதியாக இந்நூலில் ஃபிராய்டியக் கலைச்சொல் விளக்கமும், ஃபிராய்டின் கலை இலக்கிய உளப்பகுப்பாய்வுக் கட்டுரைகளின் ஆங்கிலத் தலைப்புக்களைத் தமிழில் எளிமையாக மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து, 3. 'இந்திய இடிப்பஸ்: ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு (A Freudian Reading on the Theory of Indian Oedipus)' என்ற இந்த நூல் கி.பி. 2010 வெளியிடப் பெற்றது.  கிட்டத்தட்ட 11 ஆண்டுக்கால இடைவெளியில் நலங்கிள்ளி அவர்களால் எழுதப்பெற்றதாகும்.  இப்பதினொரு ஆண்டுக்கால இடைவெளியில் ஒருசில உளப்பகுப்பாய்வுக் கட்டுரைகளை அவர் எழுதினாலும் நூல் எதனையும் வெளியிடவில்லை என்பது இங்குப்  பதியத்தக்கது.  அதற்கு மிகமுக்கிய காரணங்களும் உண்டு. அவற்றைப் பின்னர் காணலாம்.  ஃபிராய்டிய மரபுவாத இலக்கியத் திறனாய்வாளரான (Classsic Psycho analytic Literary Critic) பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி ஒரு தீவிரமான ஃபிராய்டிய வாசிப்பாளர்.  தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்.  ஆய்வில் எவ்விதப் பிசிறுமின்றித் தொடர்ச்சியாக இயங்கி எழுதிக் கொண்டிருப்பவர் என்று கூறலாம்.  அப்படிப்பட்ட ஒருவர் திடீரென்று தான் இயங்கிக் கொண்டிருந்த திறனாய்வுப் புலத்தில் எழுதுவதையும் வெளியிடுவதையும் ஒரு பதினொரு ஆண்டுக்காலம் (எழுதி வெளியிடுவதை) நிறுத்திக் கொள்கிறார் என்றால் அதற்கான வலுவான சமூகக் காரணிகளும் உண்டு.    

            உலக அளவிலும் இந்திய அளவிலும் அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் மாணவர்களாலும் பெரும் அறிஞர் என்று மதிக்கப்படுபவரும், புகழப்படுபவருமான சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ.கே. இராமனுஜம் அவர்கள் எழுதிய 'இந்தியன் இடிப்பஸ்' என்ற கட்டுரைக்கு மறுப்பாக எழுந்ததே இந்நூல்.  வெறுமனே 25 பக்கங்களுக்குள் எழுதப் பட்ட கட்டுரைக்கு உளப்பகுப்பாய்வு அடிப்படையில் மறுப்பு விளக்க நோக்கில் அரங்க நலங்கிள்ளி அவர்களால் எழுதப்பட்டதே இந்த நூலாகும்.

            இந்நூல் கீழ்க்கண்ட 5 கட்டுரைகளைக் கொண்டது.  1. ஏ. கே இராமானுஜனின் இந்திய இடிப்பஸ் ஓர் அறிமுகம், 2. இந்திய இடிப்பஸ்: தரவுகள்,தவறான புரிதல்கள் மற்றும் முறையான ஃபிராய்டிய வாசிப்பு, 3. கிரீக் மற்றும் இந்திய இடிப்பஸ் : ஏ. கே இராமானுஜனின் ஊகங்களும் ஐயங்களும், 4. இந்திய இடிப்பஸ் சிக்கலுக்கு ஃபிராய்டிய விளக்கம், 5. இந்திய இடிப்பஸ் : ஏ. கே இராமானுஜனின் முடிவுரைச் செய்திகளும் அவற்றிற்கான மறுவிளக்கங்களும்  ஆகியன.

            இந்நூலுக்குத் தமிழக நாட்டார் வழக்காற்றுத் துறையைச் சார்ந்தவரும் அறிஞருமான பேராசிரியருமான தே. லூர்து அவர்கள் நல்லதொரு அணிந்துரையினை வழங்கியுள்ளார்.  அவ்வணிந்துரையில் பல நல்ல ஆய்வு ரீதியான செய்திகள் காணக் கிடக்கின்றன.   இக்கட்டுரைகள் அனைத்தையும் ஃபிராய்டிய உளப்பகுப்பு இலக்கியத் திறனாய்வுகள் என்ற வகைக்குள் அடக்கலாம்.  ஃபிராய்டிய உளப்பகுப்பு இலக்கியத் திறனாய்வுக்குள் இதிகாச நனவிலி இடிப்பஸ் , தொன்ம நனவிலி இடிப்பஸ்  கருக்களை எடுத்துக்கொண்டு  அவற்றிற்கான ஃபிராய்டிய உளப்பகுப்பு ஆய்வு விளக்கங்களை மிக விரிவாக ஆழமாக உடைத்து உடைத்து விளக்கம் தந்து சென்றுள்ளார் நலங்கிள்ளி.  இதனைத் தே. லூர்து அவர்கள் தனது அணிந்துரையில், கீழ்க்கண்டவாறு வரவேற்றுப் பாராட்டிப் பேசிச் செல்கின்றார்.  அதாவது, '......நலங்கிள்ளியின் ஆழ்ந்த உளப்பகுப்பாய்வால் ஈர்க்கப் பட்டிருக்கிறேன்.  உளப்பகுப்புத் திறனாய்வில் ஈடுபட்டிருப்போர் மிகச்சிலரே.  அதிலும் ஒரு துறையில் காலூன்றி நின்று ஆய்வோர் மிகச்சிலரே.  அவர்களுள் நலங்கிள்ளியும் ஒருவர்.  அவருடைய நுட்பமான ஆய்வுக்கு, hairsplitting logic என்று சொல்லுவார்களே, அதாவது மயிரையும் பிளந்து ஆய்தல் என்ற தருக்கத்திற்கு இந்த நூலே சான்று' (நலங்கிள்ளி அரங்க : இந்திய இடிப்பஸ்ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு, ப.10)  என்ற அவர் கூற்றிலிருந்து அரங்க நலங்கிள்ளியின் ஆய்வுக்கூர்மையினை எளிதில் அறியலாம்.  இதோடு இத்திறனாய்வுப்புலத்தில்  இவர் உருவாக்கிய மாணாக்கர்களையும் பட்டியலிடும் பொழுது இவரின் ஆய்வறிவினை நன்கு புரிந்து கொள்ளலாம்.  தி.கு. இரவிச்சந்திரன், சு. இளங்கோ, நாகமணி, இரா. கந்தசாமி, சிவராஜ் எனச்சிலர் இத்துறையில் இன்றும் இயங்கி வருகின்றனர்.  உளப்பகுப்பாய்வுக் கட்டுரைகள், நூல்கள் எழுதியும், சொற்பொழிவுகள் ஆற்றியும் வருகின்றனர்.

            எனினும் இத்துறையில் இன்றளவும் மேற்சுட்டிய ஒருசிலரே எழுதி இயங்கியும் வருகின்றனர் என்பது குறிக்கத்தக்கது.  அதற்குக் காரணம் இத்திறனாய்வுப் புலம் மிகக் கடினமாக இருப்பதுதான்.  கோட்பாடு புதிது.  ஆங்கிலத்தில் இருப்பதும் ஒரு காரணம்.  அப்படியே கோட்பாடுகள் கிடைத்தாலும் அதனை இலக்கியங்களில் பொருத்திக் காண்கின்ற செயல்முறை எளிதாக இல்லாததால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் இதனைத் தவிர்க்கின்றனர் என்று கூறலாம்.  மேலும் இக்கோட்பாட்டுத் திறனாய்வைப் புரிந்து கொண்டு வழிகாட்டுகின்ற நெறியாளர்கள் மிகமிகக் குறைவு. அரிதினும் அரிது. ஆய்வுச்சமூகத்திலும், சமூகத்திலும் - பெரும்சவால்களும், எதிர்ப்புகளும், மொழிபெயர்ப்புச் சிக்கல்களும்  இருப்பதனால் இப்புலத்தினை ஆய்வாளர்கள் தவிர்க்கின்ற காரணத்தினால் தமிழில் ஒரு தேக்கநிலை எதிர்காலத்தில் உருவாகலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

துணைநூற்பட்டியல்

1.    இரவிச்சந்திரன் தி.கு. சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2005.

2.    இரவிச்சந்திரன் தி.கு, ஃப்ராய்ட் யூங், லக்கான் அறிமுகமும் நெறிமுகமும்  அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2007.

3.    இரவிச்சந்திரன் தி.கு, ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ்நாட்டுப்புற வழக்காறுகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2011.

4.    இரவிச்சந்திரன் தி.கு, தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் அழகியல் இணைநிலைகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2011.

5.    இரவிச்சந்திரன் தி.கு, தீ.ண்.டா.மை நனவிலி, அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2014.

6.    இரவிச்சந்திரன் தி.கு, புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2017.

7.    இராசமாணிக்கம், அடிமனத்தை ஆராய்ந்த அறிஞர், தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1962.

8.    இராசமாணிக்கம், மனக்கோளாறு எவ்வாறு ஏற்படுகிறது?, தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1963.

9.    இராசமாணிக்கம், உள்ளத்தின் விந்தைகள், தொல்காப்பியர் நூலகம், சிதம்பரம், 1965.

10. கைலாசபதி க, தமிழ் நாவல் இலக்கியம் திறனாய்வுக்கட்டுரைகள், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, 2ஆம் பதிப்பு 1977.

11. கைலாசபதி க, திறனாய்வுப்பிரச்சினைகள், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 1980.

12. கைலாசபதி க, இலக்கியமும் திறனாய்வும், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, 3ஆம் பதிப்பு 1981.

13. கைலாசபதி க, ஒப்பியல் இலக்கியம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு- சென்னை, 1999.

14. குளோறியா சுந்தரமதி (மொ.ர்), ரெனிவெல்லாக் & ஆஸ்டின் வாரன், இலக்கியக் கொள்கை, பாரிநிலையம், சென்னை, 1966.

15. சச்சிதானந்தன் வை, மேலை இலக்கியச் சொல்லகராதி, மாக்மில்லன்,  சென்னை, 1983.

16. சச்சிதானந்தன் வை, ஒப்பிலக்கியம்  (ஓர் அறிமுகம்), ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், சென்னை, 1985.

17. தமிழவன், திருப்பாவை ஓர் அமைப்பியல் ஆய்வு, ‘மேலும்’ (சிற்றிதழ்), நவம்பர்,1989.

18. நலங்கிள்ளி அரங்க, இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், வாணிதாசன் பதிப்பகம், புதுச்சேரி,1989.

19. நலங்கிள்ளி அரங்க, ஃபிராய்டின் கலை இலக்கிய உளப்பகுப்பாய்வு, வாணிதாசன் பதிப்பகம், புதுச்சேரி,1999.

20. நலங்கிள்ளி அரங்க,  இந்திய இடிப்பஸ்: ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு, தோழமை வெளியீடு, சென்னை,2010.

21. நாகரத்தினம் கிருஷ்ணா (மொ.நூ), சிமொன் தெ பொவ்வார், இனி இந்தியன் பதிப்பகம், சென்னை 2008.

22. நாகூர் ரூமி, சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம், சிநேகா, சென்னை, 2004.

23. டேவிட் கூப்பர், லதா ராமகிருஷ்ணன் (மொ.ர்), மனநோயின் மொழி, சந்தியா பதிப்பகம், சென்னை, 2009.

24. பகவதி. கு, திறனாய்வு அணுகுமுறைகள் (தொ.ர்), உலகத்தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை, 2007 மறுபதிப்பு.

25. பூரணச்சந்திரன் க,  அமைப்புவாதமும் பின் அமைப்புவாதமும்,  நிகழ் வெளியீடு, கோவை, 1991.

26.      ,,    தமிழ் இலக்கியத்திறனய்வு, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2007.

27.      ,,   அமைப்பியமும் பின் அமைப்பியமும், அடையாளம், திருச்சி, 2009.

28.       ,,   தமிழ் இலக்கியத்திறனய்வு வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2016.


------------------------------------
பெண்ணிய நோக்கில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்.
                                                                              முனைவர் மு.பத்மா. புதுக்கோட்டை

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று உதயண குமார காவியம். இக்காப்பியத்தில் உதயணன் காவிய நாயகனாக விளங்குகின்றான். உதயண குமார காவியத்தின் முதன்மை இடம் வகிக்கும் பெண் தலைமை மாந்தர்கள் பலராக விளங்குகின்றனர். இக்காப்பியத்தில்  வாசவதத்தை, விரிசிகை, பதுமாபதி, மானனீகை போன்ற நான்கு பெண்மணிகளும் முதன்மைப் பாத்திரங்களாகக் கருதத்தக்கவர்கள்.  காப்பியங்களைப் படைத்தவர்கள் ஆண்கள் என்ற நிலையிலும், ஆணாதிக்கம் தலை தூக்கியிருந்த காலகட்டத்தில் காப்பியங்கள் எழுதப்பெற்றிருந்தன என்ற நிலையிலும் ஆண் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தந்து காப்பிய ஆண்படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாகின்றது. இருப்பினும் இக்காப்பிய படைப்புகளில் பெண் பாத்திரங்களும் உரிய நிலையில் காப்பிய சுவைக்காகவும், காப்பிய நடப்பிற்காவும்  இணைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு இணைக்கப்பெற்றுள்ள பெண் பாத்திரங்களின் நடப்புகள், அவர்களின் பண்புகள் ஆகியவற்றின் வாயிலாக காப்பிய கால பெண் சமுதாய இயல்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பெண்ணாக இருந்து ஒரு காப்பியத்தை பெண் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய உதவுவது பெண்ணியத் திறனாய்வு ஆகின்றது. அவ்வழியில் உதயண குமார காவியம் என்ற காப்பியக் கதையில் இடம்பெறும் முதன்மைப் பாத்திரங்களை மட்டும் இக்கட்டுரை எடுத்துக்கொண்டு அவற்றின் இயல்புகளை பெண்ணிய நோக்கில் ஆராய்கின்றது.

வாசவதத்தை
 வாசவதத்தைக்கு யாழிசை கற்றுத்தரும் நிலையில் அவள் அறிமுகமாகின்றாள்.

'வேந்தன் தன் மக்கட்கெல்லாம்
   வேல்முதல் பயிற்றுவித்தும்
 ப+ந்துகில் செறிமருங்குல்
  பொருகயல் கண்ணி வேய்த்தோள்
 வாய்ந்த வாசவதத்தைக்கு
  வருவித்தும் வீணை தன்னைச் 
 சேர்ந்தவன் நிகரில் இன்பில்
  செல்வனும் மகிழ்வுற்றானே'

என்ற பாடலில்  வாசவதத்தை அறிமுகமாகின்றாள். ப+ந்துகில் உடுத்திய இடையை உடையவள், கயல் மீன்களைப் போன்ற கண்களைக் கொண்டவள், மூங்கில் போன்ற தோளினை உடையவள் என்ற நிலையில் அழகு சார்ந்து வாசவதத்தை அறிமுகப்படுத்துகிறாள். இவளின் அறிமுகம் தன் உடன் பிறந்த ஆண்பிள்ளைகளின் அறிமுகத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்பது இப்பாடலின் முன்னிரண்டு அடிகளைக் கண்டாலே தெரியவருகிறது.  வேந்தன் தன் மக்கட்கெல்லாம் என்று ஒரே அடியில் அழகு, கவர்ச்சி முதலியன இல்லாமல் மகன்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் மகள் அழகுடன் அறிமுகம் ஆகின்றாள்.

 பின்னாளில் வாசவதத்தையுடன் உதயணனுக்குத் திருமணம் நடைபெறுகின்றது. வாசவதத்தையுடன் இன்பம் நுகர்ந்து கடமை மறக்கிறான் உதயணன். அவனை நல்வழிப்படுத்த வாசவதத்தையை சில காலம் மறைந்திருக்கக் கூறுகிறான் ய+கி என்ற அமைச்சன்.

 இதன்மூலமாக பெண்களின் நெருக்கத்தைத் தவிர்த்தால் நற்கடமைகளை ஆற்ற முடியும் அவர்கள் அருகில் இருந்தால் ஆற்ற இயலாது என்பது தெரிய வருகின்றது.

 பதுமாவதி என்ற பெண்ணை உதயணன் மணந்ததும் வாசவதத்தை ஊடுகிறாள்.

'வென்றிவேல் கண்ணி னாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்
  கன்றிய காமம் வேண்டாக் காவல போக என்றாள்'

என்ற நிலையில் ஊடல் கொண்டு உதயணனின் மற்றொரு பெண்ணிடத்துள்ள காதலைக் கடிந்துரைக்கிறாள். இந்த ஊடலும் உதயணனால் தணிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஊடுதல் என்பது பின்னால் கூடுவதற்கான வழி என்ற மரபு இங்கு பின்பற்றப்பட்டுள்ளது என்பது தெரியவருகின்றது.

 இதுபோன்று மானனீகை என்ற பந்தாடும் கலை வல்ல பெண்ணை மணக்கும்போதும் அவள் ஊடுகிறாள்.

 'பிடிமிசை மாதர் போந்து பெருமணக் கோயில் புக்கார்
  கடிமலர்க் கோதை மன்னன் காவி நன் விழி மானனீகை
  இடிமின்னி நுசுப்பினாளை இன்புறப் புணர்ந்திருப்பத்
  துடியிடைத் தத்தை கேட்டுத் தோற்றிய சீற்றத்தானாள்'

என்ற பாடலில் மீளவும் வாசவதத்தை ஊடுகிறாள். மீண்டும் அவளின் ஊடல் தணிவிக்கப்படுகிறது.

  பின்பு ஒரு மகனைச் சுமந்தநிலையில் வான்வெளியில் பறக்கும் ஆசை வாசவதத்தைக்கு வருகின்றது. அதனையும் விருப்பத்துடன் முடித்து வைக்கிறான் உதயணன். பின்னாளில் தன் மகன் நாரவாகணன் காந்தருவலோகத்தைத் திறமுடன் ஆள வழிசெய்து அமைதியடைகிறாள்  வாசவதத்தை.
 வாசவதத்தை ஊடலும் மறுப்பும் உதயணனால் மாற்றுவிக்கும் அளவிற்கு எளிமை உடையன. ஆனால் உதயணன் திருமணம் செய்து கொண்ட பெண்கள் வாசவதத்தையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்பது இங்குக் கருத்ததக்கது.

பதுமாபதி
 உதயணனன் வாசவதத்தை பிரிந்த நிலையில் மகத நாட்டு மன்னனின் தங்கை பதுமாவதியைக் காணுகின்றான். அப்போது பதுமாபதி அறிமுகம் ஆகின்றாள்.

' பருவமிக் கிலங்கும் கோதைப் பதுமை தேர் ஏறி வந்து
  பொருவில் காமனையே காணப் புரவலன் கண்டு கந்து
  மருவும் வாசவதத்தைதான் வந்தனள் என்றுரைப்பத்
  திருநகர் மாதும் கண்டு திகைத்துளம்கவன்று நின்றாள்'

என்ற இப்பாடலில் பதுமாபதி அறிமுகமாகின்றாள். பார்ப்பதற்கு அவள் வாசவதத்தை போல இருப்பதாக உதயணன் மனம் எண்ணுகின்றது. இருப்பினும் வாசவதத்தைக்கும், பதுமாபதிக்கும் வேறுபாடு இருப்பதாகச் சுட்டி அவ்வேறுபாட்டை வாசவதத்தையின் ஊடல் தீர்க்கும் நேரத்தில் எடுத்துரைக்கிறான் 
உதயணன்.

 'ஊடியதேவி தன்னை உணர்வினும் ஒளியினாலும்
  நாடினின்ற னக்கன்னாடா நந்திணை யல்லள் என்றான்'

என்ற பாடலில் வாசவதத்தை பதுமாபதியை விடச் சிறந்தவள் என்கிறான் உதயணன். பெண்களின் அணுக்கம் வேண்டியபோது வேண்டிய அளவில் ஏற்றியும் இறக்கியும் சொல்வது ஆண்களின் இயல்பு என்றும் அதனை நம்பி ஏமாறுவது பெண்களின் தன்மை என்றும் இதன்வழி அறியமுடிகின்றது. 
 இதற்குப்பின்பு வாசவதத்தை போல் தானும் உதயணனிடம் யாழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறாள் பதுமாவதி.அவ்வாசையும் நிறைவேறுகிறது. கோமுகன் என்ற மகன் அவளுக்குப் பிறக்கின்றான். அவனுக்கு மண்ணுலக அரசை நல்குகிறான் உதயணன்.

மானனீகை
 ஒருநாள் வாசவதத்தையின் இருப்பிடத்தில் பந்தாடும் போட்டி நடைபெற்றது. அதில் ஆரியை என்ற பெண் மூவாயிரம் பந்துகளை இட்டு அவற்றைக் கொண்டுப் பந்தாடினாள். இதனைவிட யார் நன்றாக ஆட முடியும் என்ற எண்ணம் அவள்மனதில் இருந்தது. இவளைத் தோற்கடிக்க எண்ணி வாசவதத்தை தன் தோழியரைப் பார்த்தாள். அவளின் தோழிகளுள் ஒருத்தி மானனீகை. அவள் இப்போட்டியில் கலந்துகொள்ள முன்வந்தாள்.

 'ஒருவரும் ஏற்பார் இன்றியோர்ந்து அவள் நெஞ்சம் கூர்ந்து
 திருநுதல் மாது நொந்து சிறப்பின்றி இருந்த போழ்தின்
 மருவு கோசலத்து மன்னன் மகளுருவரிவை நாமம்
 சுரிகுழல் மானனீகை சொலற்கருங் கற்பினாளே'

என்ற இப்பாடலில் மானனீகை அறிமுகம் ஆகின்றாள். இவள் அறிமுகம் ஆகின்றபோதே பந்தாடலில் வெல்லுதல் வேண்டும் என் நோக்கத்தி;ல் அறிமுகப்படுத்தப்படுகிறாள் என்பது தெரிந்துவிடுகிறது.

 இவள் பந்தாடும் அழகை

 'சிலம்பு கிண்கணி சில சீர்க்கலன்கள் ஆர்ப்பவும்
 வலம்புரி மணிவடம் வளர் இளமுலைமிசை
 நலம் பெற அசைந்திட நங்கை பந்தடித்திடப்
 புலம்பு வண்டு தேனினம் ப+ங்குழல்மேல் ஆடவே'

என்ற இப்பந்தாடல் வருணனை ஆண்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. இவளைக் களவில் மணம் புரிகின்றான் உதயணன். தன் மனைவியின் தோழி என்பதால் அவளை மணம் புரிவதில் அவனுக்கு எச்சிக்கலும் எழவில்லை. ஆனால் தத்தை ஊடல் கொள்ளுகின்றாள்.

விரிசிகை
 இவளும் உதயணனால் மணம் கொள்ளப்பெற்றவள். சோலை ஒன்றில் இவளைக் கண்ட உதயணன் இவளை மணந்து கொள்ளுகின்றான். இவளே இரண்டாவதாக மணந்து கொள்ளப்பட்டவள் என்றாலும் இவளை உதயணன் நான்காவதாக வேள்வி முறைப்படி மணந்து கொள்ளுகின்றான்.

 'தேவியர் மூவர் கூடத் தேர் மன்னன் சேர்ந்து செல்நாள்
  காவின்முன்மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட
  பூவின்மஞசரியைப் போலும் பொற்புநல்விரிசிகையை
  தாவில் சீர் வேள்வி தன்னால் தரணீசன் மணந்தான்அன்றே'

இவ்வாறு உதயணனின் விருப்பத்திற்கு இசைபவர்களாக உதயண குமார காவியத்தலைவியர் அமைந்துள்ளனர். உதயணனின் விருப்பத்திற்கு எதிர் செய்பவர்களாக யாவரும் படைக்கப்படவில்லை என்ற நிலையில் ஆண்களின் விருப்பத்தின்படி நடப்பதே பெண்பிறவியின் பயன் என்பதான கருத்தாக்கத்தில் இப்பாத்திரங்கள் படைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவிற்கு வரமுடிகின்றது.

உதயணன்
 யாழ் வாசிக்கத் தெரிந்தவன். அமைச்சர்களால் நல்வழிப்படுத்தப்படுபவன். தான் கண்ணுறும் பெண்களின் அழகில் மயங்கி அவர்களைச் சேர நினைப்பவன். பெண்களின் ஊடலைத் தீர்க்க வல்லவன் என்பன போன்றன உதயணின் பாத்திரப்பண்புகளாகக் கொள்ளத்தக்கன. 
 காமமயக்கம் அதிகமுடையவன் என்பதைப் பின்வரும் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

 'இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைத்திலன்
  கழிந்தறமும் மெய்மறந்து கங்குலும் பகல்விடான்
  அழிந்தியன்பில் புல்லியே அரிவையுடை நன்னலம்
  விழுந்து அவள் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான்'

என்ற இப்பாடல் உதயணனின் காமத்தியல்பை எடுத்துரைப்பதாக உள்ளது.

 வாசவதத்தையின்பால் ஆறாக்காதல் கொண்டவனாகவும் உதயணன் படைக்கப்பெற்றுள்ளான்.

 'சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவுமகத நாட்டுக்கு
  இயைந்து நன்கு எழுந்து சென்றே இரவியின் உதயம் உற்றான்
  நயந்தனன் தேவி காதல்நன்மனத்து அழுங்கிப் பின்னும்
  வியந்து நல் அமைச்சர் தேற்ற வெங்கடும் கானம் புக்கான்'

என்ற  இப்பாடலில் உதயணன் தன் மனைவியைக் காணாது வருந்தும் பாத்திரமாகப் படைக்கப்பெற்றுள்ளான்.  இவ்வளவில் பெண்ணின்பம் நுகர்பவனாக, அதற்காக ஏங்குபவனாக உதயணன் பாத்திரம் அமைந்துள்ளது.

 உதயண குமார காவியத்தைப் படைத்தவர் யார், அவர் எப்பாலினர் என்று தெரியாத நிலையில் மேற்கண்ட ஆண்சார்புக் கருத்துகளால் உதயண குமார ஆசிரியர் ஆணாகத்தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வர முடிகின்றது. மேலும் ஆண்களின் சொல் கேட்கும் நடக்கும் சிந்தனை உடையவர்களாகவே இக்காப்பிய பெண்கள் படைக்கப்பெற்றுள்ளனர் என்பதும்  இவ்வாய்;வுக் கட்டுரையின் வழியாகத் தெரிய வருகின்றது. ஆண்கள் தன்னளவில் தன் விருப்பப்படி நடக்கக் காப்பிய கால சமுதாயம் இடம் தந்துள்ளது என்பதும் இங்கு பெறப்படும் முடிவுகளுள் ஒன்றாகின்றது.

 ---------------------------------------------

ஆய்வுச் சுற்றம்                சிறப்பிதழ் -2                             செப்டம்பர் 30.2016

உள்ளே

 1.தமிழில் உளவியில் திறனாய்வு வகைகள்  -சு. இளங்கோ

 2.  மாமன்னனும் மகாகவியும் - சேதுபதி `

3. முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

                                                                                                            முனைவர் மு.பழனியப்பன்

----------------------------------------------------     .


தமிழில் உளவியல் திறனாய்வு வகைகள்

சு.இளங்கோ, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார் அரசு கலைக்கல்லூரி,கடலூர்-1  

உளவியல் க்கான பட முடிவு 



தமிழில் உளவியல் திறனாய்வு வகைகளைப் பல வகைகளாகப் பகுக்கலாம். என்றாலும் ஒரு புரிதல் கருதிச் சில இன்றியமையாத கூறுகளை அடிப்படைகளாக் கொண்டு இங்கு வகைப்படுத்தப்படுகிறது.  உளவியல் சிந்தனையாளர்களைக் கொண்டும், உளப்பகுப்பாய்வு செய்யப்படுகின்ற பொருட்களைக் கொண்டும் வகைப்படுத்தலாம்.

            உளவியல் / உளப்பகுப்பாய்வுச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளைக் கொண்டு செய்யப்பட்ட உளப்பகுப்புத் திறனாய்வுகளை வகைப்படுத்தும் போது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1.    ஃபிராய்டிய உளப்பகுப்புத் திறனாய்வுகள்

2.    யூங்கிய உளவியல் திறனாய்வுகள்

3.    லெக்கானிய உளப்பகுப்புத் திறனாய்வுகள்

4.    பெண்ணிய உளப்பகுப்புத் திறனாய்வுகள்

முதலானவை.

வை. சச்சிதானந்தம், தி.சு. நடராஜன், அரங்க நலங்கிள்ளி (இலக்கியமும் உளப்பகுப்பாய்வும்,ப.9-22), க. பஞ்சாங்கம் (இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்,ப.148) முதலானோர் தத்தமது நூல்களில் உளப்பகுப்புத் திறனாய்வு வகைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கூறுவர்.   அவர்களில் சச்சிதானந்தம் தமது ‘ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம்’ என்ற நூலில் பாத்திர, படைப்பாளர், படைப்பாக்கம், வாசகர் உளப்பகுப்புத் திறனாய்வு வகைகளைச் சுட்டிச் செல்வர்.  அதேபோல தி.சு. நடராஜன் (திறனாய்வுக் கலை,ப.86) மேற்சுட்டிய நான்கு வகைப்பாடுகளை பேசிச் செல்லுவார். அரங்க.நலங்கிள்ளி, க. பஞ்சாங்கமும் மேற்கண்டவாறே வகைப்படுத்துவர்.  அ.மணவாளன் உளப்பகுப்பாய்வு இலக்கியத் திறனாய்வை நான்கு வகையாகப் பகுத்துக் காணலாம் என்று கூறுவார் (அ. மணவாளன், இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள்,ப.98). அவையாவன: படைப்பாளியைக் குறித்து இத்தகைய ஆய்வைச் செய்யலாம்.  படைப்பின் உள்ளடக்கம் குறித்து ஆராயலாம். படைப்பின் புறக்கட்டமைப்பு குறித்தும் ஆராயலாம்.  அல்லது படைப்புக்குரிய வாசகனை அடிப்படையாகக் கொண்டும் இத்தகைய ஆய்வைச் செய்யலாம் என்று உரைப்பார் (மேலது,ப.98). என்றாலும் இவ்வகைப்பாட்டில் மூன்றாவதாக உள்ள படைப்பின் புறக்கட்டமைப்பு குறித்த அவரின் வகைப்பாடு எதனை அடியொற்றியது என்பது தெளிவுபடவில்லை.  ஆனால் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. மணவாளனும், பஞ்சாங்கமும் இந்த வகைப்பாடுகளை டெரி ஈகிள்டனிடமிருந்து (Terry Eagleton, Literary Theory : An Introduction, of minneasota press, Minneoplis:U1983)) பெற்றுச் சுட்டிச் செல்கின்றனர். இவ்வகைப்பாடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் சற்று விரிவாக விளக்கிச் செல்கின்றார் வை சச்சிதானந்தம்.  மற்றவர்கள் வகைகளைக் குறிப்பிட்டுச் செல்கின்றனர்.

அரங்க நலங்கிள்ளி - பாத்திர, படைப்பாக்கம் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளை இலக்கியங்களில் பொருத்தி விளக்கம் (Interpretation) தந்து  மூன்று நூல்களை வெளியிட்டுத் தனித்துவம் கொண்டவராகத் திகழ்கிறார்.  அவர் சென்ற பாதையில் தி.கு. இரவிச்சந்திரன், சு. இளங்கோ, இரா. கந்தசாமி, கு. நாகமணி முதலானோரும் இத்தகைய உளப்பகுப்பு வகைப்பாடுகளை நிகழ்த்தி வருகின்றனர்.  இதேபோல இரவிச்சந்திரன் திகு, பொதுவாக இல்லாமல் பாத்திர, படைப்பாக்க, படைப்பாளர் (புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2017) உளப்பகுப்புத் திறனாய்வுகளை விரிவாகவும் ஆழமாகவும் செய்து வருகின்றார் என்பது இங்குக் குறிக்கத்தக்கது. மற்றவர்கள் உளப்பகுப்பாய்வுத் திறனாய்வுக் கோட்பாட்டினை அறிமுக நோக்கில் பொதுவாகக் கூறிச் செல்வதோடு சரி.  அதிலும் தனித்த உளப்பகுப்பு இலக்கியத்திறனாய்வுகளை ஆழமாக, விரிவாக மணவாளனோ,  தி.சு. நடராஜனோ, பஞ்சாங்கமோ நிகழ்த்தவில்லை.

ஆயினும்  தற்பொழுது தமிழிலக்கியத் திறனாய்வுப் பரப்பில் உள்ள உளப்பகுப்பாய்வு இலக்கியத் திறனாய்வு வகைகளைக் கீழ்க்கண்டவாறு ஒரு பொதுப் புரிதலுக்காக வகைப் படுத்தலாம். அதாவது,  உளப்பகுப்பாய்வு செய்யப்படுகின்ற பாத்திரங்கள், படைப்பாளர், வாசகர்கள், படைப்பாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டும் வகைப்படுத்தலாம்.

  1. பாத்திர உளப்பகுப்புத் திறனாய்வுகள்

  2. படைப்பாளர் உளப்பகுப்புத் திறனாய்வுகள்

  3. படைப்பாக்க உளப்பகுப்புத் திறனாய்வுகள்

  4. வாசகர் உளப்பகுப்புத் திறனாய்வுகள்

  5. பொது இலக்கிய உளவியல் திறனாய்வுகள்

மேற்சுட்டியவற்றுள் 5-ஆம் வகைப்பாடு எந்தவிதமான பகுப்பு வகைப்பாட்டுத் தன்மையில் அல்லாமல் பொத்தாம் பொதுவான நிலையில் ‘உளவியல்’ என்ற நிலையிலும் பெயரிலும் நிகழ்த்தப் பெற்ற ஆய்வுகளைக் குறிக்கின்றது.  அதாவது கோட்பாட்டாளர்களின் பெயரிலோ, கோட்பாட்டாளர்களின் கோட்பாடுகளின் நோக்கிலோ – அதாவது ஃபிராய்டிய, யூங்கிய, லக்கானியக் கோட்பாடுகளின் நோக்கிலோ நிகழ்த்தப் பெறவில்லை.  ஒரு புரிதலற்ற தன்மையில் மொன்னையான நிலையில் அதே நேரத்தில் இந்தத் திறனாய்வு நோக்கின் மீது ஒருவித ஈர்ப்பு கொண்டு சரியான வழிநடத்துதலின்றி, புரிதலின்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் தமிழில் ஏராளமாக உள்ளன.  இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் ஆய்வுக் கோவைகளில் வெளியிடப்பட்டுள்ள உளவியல் கட்டுரைகள் பல இவ்வகையினைச் சார்ந்தவை.

   உளப்பகுப்பாய்வு என்பது கத்திமேல் நடக்கின்ற நிலையாகும்.  பிசகினால் கொச்சைவாத ஃபிராய்டியமாக / பாலியல்வாதமாகக் கருதப்பட்டுத் தூக்கி வீசப்படும் நிலை உருவாகிறது.  ஏனெனில் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வுப் பொருண்மை எதன் மீது இருக்கிறது என்றால் மனிதமனத்தின் மீது.  அந்த மனித மனத்திலுள்ள கோபம், காமம் முதலானவற்றின் மீது அதன் கவனம் குவிந்துள்ளது.  ஃபிராய்டியத்தை வெறும் ‘பாலியம்’ (Sexism) ஆகப் பார்க்கிறது இந்த உலகமே.  தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது.  ஆனால் உலக அளவில் இப்போதைய நிலை மாறியிருக்கிறது என்று கூறலாம்.   அதனை ஓர் ஆய்வாக ஏற்றுக் கொண்டு வரவேற்பும் பெற்று உள்ளது.  மேலும் அது ஓர் அறிவியல் முறை ஆய்வாகக் கருதப்பட்டுச் செழுமைப்பட நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது இவண் பதியத்தக்கது.  உடன் இங்கு ஒரு வினா எழலாம் உளப்பகுப்பாய்வு எவ்வாறு அறிவியல் ஆய்வாகும் ? என்று.  அதற்கு லக்கானியம் மிகத்தெளிவாக விடையளிக்கின்றது.

ஃபிராய்டியத்திற்கு லக்கானியம் ஏன் விடையளிக்க வேண்டும்?   அடிப்படையில் ழாக் லக்கான் ஃபிராய்டைப் பின்பற்றிய உளப்பகுப்பாய்வாளர் ஆவார்.  ஃபிராய்டுக்குப் பின்பு பிராய்டின் எழுத்துக்களை உலக அளவில் கொண்டு வந்து சேர்த்ததில் லக்கானுக்குப் பெரும் பங்கு உண்டு.  லக்கானுக்கு 'பிரெஞ்சு ஃபிராய்ட்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஃபிராய்ட் ஜெர்மனியில் எழுதிய உளப்பகுப்பாய்வுக் கருத்துக்களை ஜெர்மன் மொழியிலேயே கற்று அதன் பொருண்மையைச் சிதையாமல் உலகிற்கு கொண்டுவந்து சேர்த்த பெருமை லக்கானுக்கு உண்டு.  ஆங்கில மொழிபெயர்ப்பைத் தவிர்த்துவிட்டு ஜெர்மன் மொழியிலேயே ஃபிராய்டின் எழுத்துக்களைப்  படித்து அதை மொழிபெயர்த்துச் சரியாகப் புரிந்து கொண்டு உளவியல் உலகிற்குக் கருத்துக்களைத் தந்து ஃபிராய்டின் மீதான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறுப்புக்களையும் மறுத்து மீண்டும் ஃபிராய்டிய பாதைக்குத் திரும்பும் என்கிற வாதத்தை முன்வைத்து ஃப்ராய்டை மீண்டும் உளப்பகுப்பாய்வு உலகில் தலைநிமிரச் செய்தவர் இந்த லக்கான். 

                ‘ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வு முறை அறிவியல் சார்ந்ததா என்னும் வினாவை அறிவியல் அறிஞர்கள் எழுப்பக் காரணம் என்ன என்று டாக்டர் லக்கான் ஆராய்ந்தார்.   அடி மனதின் இயல்பை ஆராய்வதை இலக்காகக் கொண்டவர் ஃபிராய்ட்.   இந்த அடி மனதை எவ்வாறு ஆராய்ந்தார்? அடி மனத்தை அணுகுவதற்கு உரிய ராஜபாட்டை கனவுகளே என்று ஃபிராய்டு கண்டறிந்தார்.  அடி மனத்தை நேரடியாக ஆராய இயலாமையை உணர்ந்த ஃபிராய்டு கனவுகளின் மூலமாக ஆராய்ந்தார்.   எனவே கனவுகள் தாம் அவரது ஆய்வுப் பொருளாக அமைகின்றன.  இந்தக் கனவுகளும் அறிவியல் தரவுகளாகா என்பதை அனைவரும் அறிவர்.   இதனால்தான் பிராய்டிய ஆய்வுப் பொருள் அறிவியல் தரவென்று என்று அறிவியல் அறிஞர்கள் கருதினர் என்பதை உணர்ந்த லக்கான் இதனை மேலும் ஆராய்ந்த விடத்து பிராய்டின் ஆய்வுப் பொருள் கனவுகள் அல்ல என்று கண்டறிந்தார் (மணவாளன் அ.அ., இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள்,  பக்.104-105)’.

 ‘ஃபிராய்ட் கனவுகளை ஆராய்ந்து விளக்கினார் எனினும் அவற்றை நேரிடையாக ஆராயவில்லை.  தமக்குத் தகவலாளிகளாகப் (Informants)  பயன்பட்டவர்களின் வாய்மொழி வாயிலாகத் தான் கனவுகளை ஆராய்ந்தார்.    அதாவது கனவு என்னும் அடிமன நிகழ்வை நேரடியாக ஆராய இயலாது.    எனவே கனவுக்குரியோர் அதனை மொழி வாயிலாகப்  பதிவு செய்தனர்.     இத்தகைய மொழிதான் அதாவது கனவின் மொழி வடிவத்தைத்தான்  பிராய்டு ஆராய்ந்தார்.  கனவை மொழி வாயிலாகத்தான் ஆராய வேண்டும்;   ஆராய முடியும் என்னும் கருத்தை பிராய்ட் கனவுகளின் விளக்கம் என்னும் தம்முடைய நூலின் முதல் இயலின் முதல் வாக்கியத்திலேயே தெளிவுபடுத்துகிறார்.  எனவே பிராய்டின் ஆய்வுப்பொருள் கனவென்று;  கனவின் மொழி வடிவமே.   தகவலாளிகள்தாம் (மனநோயாளிகள்) கண்ட கனவுகளை மொழியின் வாயிலாக விவரித்துக் கூறும் கூற்றைத் தான் ஃபிராய்டு ஆராய்கிறார்.   ஆகவேதான் மொழியின் கூறுகள் ஆகிய உவமை, உருவகம் ,ஆகுபெயர், வடமொழி, சிலேடைகள், தகவல்கள் போன்றவற்றை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்.   இந்த மொழிக் கூறுகளின் அமைப்பு (Structure) இவை தொழிற்படும் அல்லது வழங்கும் ஒழுங்கமைவு  (System)  இவற்றின் பொருள் குறிப்பீட்டு முறைமை (Nature of Signification)  ஆகியவற்றை மொழியியல் கண்ணோட்டத்தில் பிராய்டு ஆராய்கிறார் (மேலது,பக்.105-106)  என்ற லக்கானிய விளக்கத்தையும் தந்து இன்னும் கீழ்க்கண்டவாறு ஃபிராய்டியத்தை அறிவியல் ஆய்வாக விளக்கிச் செல்கின்றார்.

மேலும் அவர்,  ‘ பிராய்டின் ஆய்வுப்பொருள் கனவுகள் அல்ல;  கனவுகளைப் பற்றிய மொழி வடிவங்களே.   எனவே  பிராய்டின் ஆய்வு பொருள் மொழியின் அமைப்பு விசேடங்கள் தானே தவிர பிறிதில்லை.   மொழியின் அமைப்பு , ஒழுங்கமைவு ஆகியவற்றை ஆராயும் மொழியியல் ஆய்வுகள் அறிவியல் அடிப்படையை உடையன என்பது வெளிப்படை.   ஆதலால் பிராய்டின் உளவியல்,  அறிவியல் அடிப்படையில் அமைந்த ஓர் ஆய்வு அணுகுமுறைதான் என்பதை டாக்டர் லக்கான் தம் ஆய்வுகளின் வழி உலகுக்கு எடுத்துக் காட்டினார்.   இந்தக் கண்டுபிடிப்பு ஃப்ராய்டுக்குப்  பின்னர் உளப்பகுப்பாய்வியலுக்கு வழங்கிய மிகச்சிறந்த நன்கொடையாக கருதப்படுகிறது (மேலது,ப.106).  (மேற்சுட்டிய மேற்கோள்களில் ஃபிராய்டின் பெயர்ச் சொல் மொழிபெயர்ப்பை அ.அ.  மணவாளன், பிராய்டு என்றே தருவதால் அதனை அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி ஆய்வாளரும் இங்குத் தந்துள்ளார்).  

               மேலே தந்துள்ள லக்கானிய விளக்கத்தின் படி ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு ஓர் அறிவியல் அணுகுமுறைதான் என்பது புலப்படுகிறது.  இந்த லக்கானிய விளக்கத்தை மேற்குலகம் ஏற்றுக்கொண்டால் போன்று கீழைத் தேயங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது.  ஏன் இன்னும் சொல்லப்போனால் ஃபிராய்டையும், லக்கானையும் கீழைத்தேய ஆய்வு உலகம் உள்வாங்கவும் இல்லை.  புரிந்து கொள்ளவும் இல்லை.   படிக்கவும் இல்லை.   தமிழ்  ஆய்வுச்சூழல் இன்னும் தீவிரமான நிலையில் ஃபிராய்டியத்தைப் பார்த்து அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.  அதனைத் தீண்டத் தகாத ஆய்வுநிலையில் வைத்துக் கொண்டு இருக்கிறது.  இதனை இன்றைய தமிழ் ஆய்வு வரலாற்று நூல்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.   அறிமுக உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு வரலாற்றுக் கட்டுரைகளில் அதிகப் பதிவுகள்  இல்லை என்பதே இதன் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

   உலக அளவில் உளப்பகுப்புத் திறனாய்வு தோன்றி முக்கால் நூற்றாண்டுக் காலம் ஆன நிலையிலும் உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு தமிழில் வளரவில்லை என்றால் அதற்கு எழுந்த எதிர்ப்பும் வரவேற்பின்மையும் காரணங்களாகும்.  அதோடு படைப்பைப் பற்றியும் படைப்பாளரைப் பற்றியும், படைப்புத் தொழில் இரகசியத்தையும் அவற்றின் அடியாழத்திற்குச் சென்று அதன் உண்மையையும், உளவியலையும், உளவியலுண்மையையும் எடுத்துக் கூறுவதால் அதனை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவமும், புரிதலும் இல்லாமையால் இந்த நிலை உருவாகின்றது என்பதையும் இந்த ‘உளப்பகுப்பாய்வு ஆய்வு வரலாறு எழுதுதல்’ வழிப் புரிந்து கொள்ளமுடிகிறது.

அவ்வாய்வுக் கோவைகளில் உள்ள எல்லாக் கட்டுரைகளையும் இங்குக் குறிப்பிடவில்லை.  பொதுநிலையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளையே இங்குச் சுட்டப்படுகிறது.   அவற்றில் ஆர்வம் இருக்கின்றது என்பது தெரியவருகின்றது.  ஆனால் உளப்பகுப்பாய்வுப் பொருண்மைத் தெளிவில்லை.  அதற்கு வாசிப்புப் போதாமையும், ஆய்வனுபவின்மையும், போதிய நெறிகாட்டுதலின்மையும் காரணங்களாகும்.

தமிழில் உளவியல் திறனாய்வு வகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்துவது ஃபிராய்டிய உளப்பகுப்புத் திறனாய்வு ஆகும்.  ஃபிராய்டிய  உளப்பகுப்புத் திறனாய்வில் பாத்திர, படைப்பாளர், படைப்பாக்க உளப்பகுப்புத் திறனாய்வுகள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.  யூங்கிய உளவியல் திறனாய்வுகள் அதிகம் நிகழ்த்தப் பெறுகின்றன.   அதற்குக் காரணம் யூங்கியத் திறனாய்வில் உள்ள மறை / புதிர்த் தன்மையும் காரணமாக இருக்கலாம்.  ஃபிராய்டிய உளப்பகுப்புத் திறனாய்வில் இடிப்பஸ் கோட்பாட்டுத் திறனாய்வுகள் மிகுதியாக நிகழ்த்தப்பெறுகின்றன.  உளப்பகுப்புத் திறனாய்வை இடிப்பஸ் உளப்பகுப்பு இலக்கியத் திறனாய்வு என்றே அழைக்கலாம்.  அந்த அளவிற்கு ஃபிராய்டின் கோட்பாடுகளில் இடிப்பஸ் கோட்பாடு பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது.  தமிழிலக்கியப் பாத்திர உளப்பகுப்புத் திறனாய்வுகளில் ‘இடிப்பஸ் கோட்பாட்டுச் செய்முறை விளக்கம்’ அதிகளவில் செய்யப்படுகின்றது என்பதனை இவ்வாய்வின் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

1.    பெண்ணிய உளப்பகுப்புத் திறனாய்வை இதுவரை தமிழில் இருவர் செய்துள்ளனர்.  தி.கு. இரவிச்சந்திரன், இரா.காஞ்சனா ஆகிய இருவர்.  தி.கு. இரவிச்சந்திரனின் கட்டுரைகள் இரண்டு. லக்கானியப் பெண்ணிய நோக்கில் நாட்டுப்புற வழக்காறுகள், தமிழ் இலக்கியங்களில் பெண்கள், கீதா (ப.ர்), கிருஷ்ணகிரி, 2012.

2.    லக்கானியப் பார்வையில் நவீனப் பெண் கவிஞர்களின் உடல் மொழி, பெயல் அரையாண்டு ஆய்விதழ் தொ-1, கோயம்புத்தூர் ஏப்ரல் 2015 – செப்டம்பர் 2015.

இவையிரண்டும் லக்கானியப் பெண்ணிய நோக்கில் நிகழ்த்தப்பட்டவை.   இரா. காஞ்சனாவின் கட்டுரை பெண்ணிய உளப்பகுப்பாய்வு அடிப்படையில் எழுந்த முயற்சி என்று கூறலாம். 

லக்கானிய உளப்பகுப்பாய்வைத் தமிழில் தி.கு. இரவிச்சந்திரன் செய்துள்ளார்.  வேறு யாரும் செய்ததாகப் பதிவில்லை.  ஆய்வாளருக்குத் தரவுகள் கிடைக்கவில்லை.

இன்றைய தமிழிலக்கியத் திறனாய்வு உலகில் உளவியல் திறனாய்வுகள் அதிகம் பேரால் ஆய்வு செய்யப்படவில்லை இவ்வாய்வு வழி அறிய முடிகிறது.  அதே நேரத்தில் ஃபிராய்டிய உளப்பகுப்பு இலக்கியத் திறனாய்வு உளவியல் திறனாய்வுகளில் பெரும் கோலோச்சுவதை கட்டுரைகள், நூல்கள் தரவுகளின் வழி உணரமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்

1.    இரவிச்சந்திரன் தி.கு. சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2005.

2.    இரவிச்சந்திரன் தி.கு, ஃப்ராய்ட் யூங், லக்கான் அறிமுகமும் நெறிமுகமும்  அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2007.

3.    இரவிச்சந்திரன் தி.கு, ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ்நாட்டுப்புற வழக்காறுகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2011.

4.    இரவிச்சந்திரன் தி.கு, தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் அழகியல் இணைநிலைகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2011.

5.    இரவிச்சந்திரன் தி.கு, தீ.ண்.டா.மை நனவிலி, அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2014.

6.    இரவிச்சந்திரன் தி.கு, புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2017.

7.    காஞ்சனா இரா., இலக்கியமும் உளவியலும், விஷ்ணுப்பிரியா பதிப்பகம், மதுரை, 1997.

8.    சண்முகசுந்தரம் சு, நாட்டுப்புறவியல் உளவியல் பார்வை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1991.

9.    சிவனேசன் க. “உளவியல் நோக்கில் “அம்மா வந்தாள், உன்னைப் போல் ஒருவன்  - ஒப்பீடு’, வளர்மதி – மலர்விழி பதிப்பகம், சிவகாசி, 2010.

10. சுதர்சன் மு, பிரகதி வே(ப.ர்), பன்முகப்பார்வையில் வள்ளலார், மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி, 2007.

11. செல்லப் பாண்டியன் க, மன அலசல், இலக்கியம் / பெண்ணியம் / வள்ளுவம் / பழமொழி, கார்முகில் பதிப்பகம், மதுரை, 2014.

12. செல்லப் பாண்டியன் க, மன அலசல் சமூக – அரசியல் / கலாச்சாரம் / சாதியம், கார்முகில் பதிப்பகம், மதுரை, 2014.

13. தமிழவன், திருப்பாவை ஓர் அமைப்பியல் ஆய்வு, ‘மேலும்’ (சிற்றிதழ்), நவம்பர்,1989.

14. நலங்கிள்ளி அரங்க, இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், வாணிதாசன் பதிப்பகம், புதுச்சேரி,1989.

15. நலங்கிள்ளி அரங்க, ஃபிராய்டின் கலை இலக்கிய உளப்பகுப்பாய்வு, வாணிதாசன் பதிப்பகம், புதுச்சேரி,1999.

16. நலங்கிள்ளி அரங்க,  இந்திய இடிப்பஸ்: ஃபிராய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு, தோழமை வெளியீடு, சென்னை,2010.

17. நாகரத்தினம் கிருஷ்ணா (மொ.நூ), சிமொன் தெ பொவ்வார், இனி இந்தியன் பதிப்பகம், சென்னை 2008.

18. நாகூர் ரூமி, சிக்மண்ட் ஃப்ராய்ட் கனவுகளின் விளக்கம், சிநேகா, சென்னை, 2004.

19. பகவதி. கு, திறனாய்வு அணுகுமுறைகள் (தொ.ர்), உலகத்தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை, 2007 மறுபதிப்பு.

20.       ,,   தமிழ் இலக்கியத்திறனய்வு வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2016.

21.  மணவாளன் அ.அ., இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1995.



மாமன்னனும் மகாகவியும்  - 
முனைவர் சொ.சேதுபதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, 
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி- 605003, 

  

உட்பொதிக்கும் படங்கள் 1 

எப்போதும்போல, பாரதியின் வாழ்வை அசைபோட்டுக்கொண்டிருந்த ஒரு பட்டப்பகலில், முண்டாசு மகுடமாக, கைக்கோல் செங்கோலாய், கண்களில் தண்ணொளி சுரந்து உலகு காக்கவேண்டிச் சிம்மாசனம் அமர்ந்த  மாமன்னராக நம் மகாகவி பாரதி வீற்றிருக்கும் தோற்றத்தைக் காரைக்குடி பாரதியின் நிழற்படம் என்னுள் உருக்காட்டத் தொடங்கியது. 
மன்னருக்குரிய அனைத்துப் பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு மகாகவியையும், மகாகவிக்குரிய மொழிவேகத்தைத் தன்னுள்ளிருந்து புலப்படுத்திய மன்னரையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்தி வரலாற்றை நினைத்துப் பார்த்த அந்த அனுபவத்தில் பிறந்ததுதான் இந்தக் கட்டுரை.
தனக்கோ, தன்னாட்டிற்கோ, தன்னினத்திற்கோ, இழிவெனில் பொங்கிக் கிளர்ந்தெழும் அறச்சினம் மானுடகுலத்திற்கு உண்டு. பழிக்கு நாணியும், புகழுக்கு உழைத்தும், அஞ்சுவது அஞ்சி, அஞ்சாமை இயல்பாகித் தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் தகுதிமிகு சான்றோர்களைப் பெற்றது தமிழகம். சங்ககாலம் தொடங்கிச் சமகாலம் வரையிலும் ஒரு நெடிய பாட்டுப் பரம்பரையைப் பெற்ற தமிழகத்து வரலாற்றில் இம்மரபு திறம்பட வளர்ந்துவருவதை எப்போதும் காணலாம். 
ஆண்டில் இளமை கருதி, ஆளுமைத்திறனைக் குறைபட மதித்துத் தகுதிசால் இளைஞர்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படாததுகூட, வன்முறையில் அவர்களை ஈடுபட வைத்துவிடுகிறது என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை. அதைவிடவும், பெரியவர்கள் என்று(வயதால் மட்டும்!) தம்மைக் கருதிக்கொள்கிறவர்கள், (அதேவயதுகருதி) இளையவர்களை எள்ளி நகையாடும்போதும், அலட்சியப்படுத்தும்போதும், இளைஞர் களுக்குள் எழும் அறச்சினம் ஆற்றல்மிக்க மாற்றத்தை வரலாற்றுக்கு வழங்கிவிடுவதையும் காண முடிகிறது.
முன்னர்க்குறிப்பிட்ட தன்மையிலிருந்து மடைமாற்றிப் பின்னர் எழும் பேரெழுச்சிக்கு வித்திட, ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை வரவேற்க வேண்டித்தான், ‘போகின்ற பாரதத்தைச் சபித்து, வருகின்ற பாரதத்தை வாழ்த்தி’, நவீனப் போர்ப்பரணி பாடுகின்றார் அவர்.
‘ஒளிபடைத்த கண்ணோடும் உறுதிகொண்ட நெஞ்சோடும் களிபடைத்த மொழியோடும் கடுமை கொண்ட தோளோடும்’ எழுந்துவரும் இளைபாரதம், தெளிவுபெற்ற மதியோடு (பெரியவர்கள் பண்ணும்  ‘சின்னத்தன’மாகிய) சிறுமையைக் கண்டு பொங்குவதாகவும் எழும் என்பது பாரதியின் நம்பிக்கை. அதேசமயம், அவர்களது எளிமைகண்டு இரங்க வேண்டிய இன்றியமையாப்பண்பும், ஏறுபோல் நடையுடைய இளைஞர்கட்குத் தேவை என்று வலியுறுத்துகிறார். 
‘இது வெறுமனே ஊருக்கான உபதேசமன்று; தாம் உணர்ந்து கடைப்பிடித்து ஒழுகிய அனுபவத்தின் வெளிப்பாடு’ என்பதை, பாரதியாரின் வரலாறு மெய்ப்பிக்கும். 
“ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்கு
உண்மை தெரிந்தது சொல்வேன்”  என்றவர் அல்லவா, அவர்!
பாரதியாருக்கு இளைஞர்கள்பால் அளவிறந்த நம்பிக்கையும் அக்கறையும் உண்டு. வளைந்தும் நெளிந்தும் கூனியும் குறுகியும் திரிகிற மனிதர்களைக் கண்டால் அவருக்கு அருவெறுப்பு. அதிலும் இளைஞர்கள் யாரும் கூனித்திரிந்தாலோ அவருக்குக் கோபம் வந்துவிடும். “கூனாதே, கூனாதே’ என்று இளைஞர்களிடம் அடிக்கடி கூறுவார்” என்று பாரதியார் பற்றி, வ.ரா. குறிப்பிடுவார். (வ.ரா. மகாகவி பாரதியார்,ப.65)
1919இல் காரைக்குடிக்கு வந்திருந்த பாரதியார் அங்குள்ள அன்பர்களின் வேண்டுகோளுக் கிணங்க, சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். ‘சித்திரப்பாவையின் அத்தகு அடங்கி‘, கேட்டுக்கொண்டிருந்த அவையினரில் சா.கணேசனும் ஒருவர். பின்னாளில் கம்பன் அடிப்பொடியான அவர், அந்த அனுபவத்தில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுவார்: பாரதியார், “கொட்டடா ஜெயபேரிகை பாடிக்கொண்டிருக்கும்பொழுது, என் உடன் ஒத்த பருவத்தினரும் உயிர்த்தோழருமான ஸ்ரீ சித.இராமநாதன் அவருக்கு நேரே உட்கார்ந்திருந்தார். எப்படி இருந்தார்? முகவாய்க்கட்டையில் கையை முட்டித் தாக்கிக்கொண்டு, உடலைக் கூனியவாறு, பாரதியாரை வைத்த கண் வாங்காமலிருந்தார். இவருடைய கூனிக் குறுகிய உடம்பு பாரதியார் கண்களை உறுத்திற்று. “நிமிர்ந்திரடா, கூனற்பாண்டியா” என்று முதுகில் ஒரு போடு போட்டார். சுற்றியிருந்த எல்லோருடைய உடம்புகளுமே விரைந்து நின்றன என்றால், அடிபட்டவரைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?”(கம்பன்அடிப்பொடி, கட்டுரைக்களஞ்சியம், பக்.47-48) என்று முடிக்கிறார்.
சொல்லியவண்ணமே நடந்தும் காட்டியவர் அவர் என்பதற்கு, அதே காலக்கட்டத்தில் அவரைச் சந்தித்த காரைக்குடி இராய.சொக்கலிங்கன் அவர்கள் குறிப்பிடுவதையும் ஒப்பு நோக்கலாம். “பாரதியாரோடு கூட இருந்த நாட்களில், அவர் செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் நாங்கள் வீரத்தைக் கண்டோம். எழுந்து நடப்பாரானால், “ஏறுபோல் நட” என்று அவர் சொன்னபடி கோணாமல், வளையாமல், நிமிர்ந்து சிம்மம்போல நடப்பார்.” இதில் இன்னொன்றையும் கவனிக்கலாம். அவருக்குப் பாண்டியர் என்றால் மிகவும் பிரியம். இராய.சொ. எழுதுகிறார்: “எங்களையெல்லாம் பாரதியார், பாண்டியா, அல்லது தம்பி என்று அன்போடு அழைப்பார். தம்பி என்ற சொல் தமிழில் மிகச்சிறந்த ஒரு அன்புரிமைச் சொல். பாண்டியன் என்பது ஒரு நாடு பற்றி வந்த சொல். அச்சொல்லில் பாரதிக்கு மிகவும் பிரியம். அவர் பாண்டி நாட்டா ரல்லவா? நாங்களும் அந்நாட்டாராதலால், எங்களைப் பாண்டியா என்ற அழைப்பது பொருத்தந்தானே!” (ரா.அ.பத்நாபன்(தொ.ஆ), பாரதியைப் பற்றி நண்பர்கள், பக்.200-201)
உண்மைதான். காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தை வாழ்த்திப்பாடும் பாரதியார்,
“புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதன்னைப் பாரறியப் புகட்டும் வண்ணம்
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற் காரைக்குடியூர் தனிலே”
என்று அதன்இருப்பிடத்தைப் பாண்டிநாட்டை முன்னிறுத்துவதைச் சுட்டுவதைப் பார்க்கலாம். மேலும்,
    “மூன்றுகுலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்”
என்று தமிழன்னை கூறுவதாகப் பாடும் பாரதியார், தமிழ்நாட்டைப் பற்றிக்குறிப்பிடும்போது,
“காவிரிதென்பெண்ணை பாலாறு- தமிழ்
சண்டதோர் வையை பொருனைநதி-என
மேவிய யாறுபலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு”
என்கிறார். இப்பாடலில் பாண்டிய நாட்டு ஆறான, வையையினை, தமிழ்கண்டதோர் வையை என்று சிறப்பிப்பதையும் காணலாம்.  
இவையனைத்துக்கும் மேலதாக,‘மஹாமஹோபாத்யாய’ விருது பெற்றதை ஒட்டி, உ.வே. சாமிநாதய்யரைப் பாராட்டிப் பாடியபோது,
“முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன் பெருமை மொழியலாமோ?” 
என்று வினவுகிறார். ஆனாலும், ’குடந்தைநகர்க் கலைஞர்கோவே’ என்று அவர்க்குப் பட்டம் நல்கி, 
“பொதியமலை பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர்வாயில் 
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே”
என்று வாழ்த்தி அமைதிகொள்கிறார். அந்தக்கணத்தில் பாண்டியமன்னர் இல்லாத ஏக்கம் அவர் மனத்துள் எழுந்து மங்குவதையும் உணரமுடிகிறது. அந்த ஒரு மின்னல்பொழுதில் மாமன்னருக்குரிய ஆளுமைத் திறமையும், மகாகவிக்குரிய மொழிவீறும் ஒருசேர எழுந்து, மகாகவி பாரதியாரை, ஒரு பாண்டிய மன்னராக நிலைநிறுத்துவதை உணரமுடிகிறது. அடுத்த கணமே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை  அவர் ஒத்திருப்பதையும் கருத முடிகிறது. இருபதுக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளை இடைவைத்துப் பிறந்த இந்த இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையில், ஒருமித்த உணர்வும் எழுச்சியும் ஓங்கிமிளிர்வதை. இருவர்தம் வாக்குகளால் அறியும்போது எழுந்த வியப்பில் சிந்தை சிலிர்க்கிறது.
ஆம்!நெடுஞ்செழியபாண்டியன் இளம்பருவத்திலேயே ஆட்சிப்பொறுப்பேற்றவன். அது கருதியே அவனை இளக்காரமாக நினைத்து, ஒருவர் இருவர் அல்லர், எழுவர் படையெடுத்து வந்தனர். சேரன், சோழன் என்ற இருபெருவேந்தரொடு, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் ஐம்பெரு வேளிருமாக எழுவர் படையெடுத்து வந்ததோடு, ‘இளையவன் இவன்’என, அவர்கள் கூறிய சிறுசொல் அவனது உள்ளத்தைப் புண்படுத்திவிட்டது. அறச்சீற்றம்பொங்க, வில்லேர் உழவனாகிய அவன் சொல்லேர் உழவனாக மாற்றம் கொள்கிறான். அப்போது. வஞ்சினத்தோடு அவன் பாடிய பாடல் புறநானூற்றிற்குப் புதுப் பொலிவு தருவதைப் பார்க்கலாம்.
“நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்
இளையவன் இவன்என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப்பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படைஅமை மறவரும் உடையம் யாம்என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்குஅகப் படேஎன் ஆயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
கொடியன் எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும்கோலேன் ஆகுக,
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே. (புறநானூறு- 72)
‘இளையவன் இவன் என உளையக்கூறிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழுவேந்தரைப் பெருவெற்றி கொண்டுவிட்டான் பாண்டியன்.
 இந்த ஆவேசம்தான், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாரதிக்குள்ளும் பொங்கி எழுகிறது. தன்னைப் பார்த்துச் சிறுவன் எனக்கருதி, ‘பாரதி சின்னப்பயல்’ என்று ஈற்றடி கொடுத்துப் பாடச் சொல்லிய காந்திமதி நாதப்பிள்ளைக்குமுன்னே பாரதியைச் சீறச்செய்ததும் அந்தப் பாண்டிய மண்ணின் பாங்குபோலும். 
எட்டயபுரத்தை விட்டு, தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்க, நெல்லையூர் சென்று ஆங்கிலக் கல்வி கற்கப் போன, பாரதியார் தன்னிலும் வயதில் மூத்த மாணாக்கரும், தமிழ்ப் பெரும்புலவர் சோணாசலம்பிள்ளையின் குமாரரும் ஆகிய காந்திமதிநாதப்பிள்ளையைச் சந்திக்கிறார். சுப்பிரமணியம் என்ற பெயரைத்தாண்டி, பாரதி என்ற பட்டமே பெயராகி நிலை கொண்டுவிட்ட சுப்பையாவின்மீது அப்பிள்ளைக்குப் பொறாமை. ஒரே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் காந்திமதிநாதப்பிள்ளை சீனியர். எனவே, வயதில் இளைய பாரதியைச் சீண்டிப்பார்க்க நினைத்து, (அந்தக்காலத்து ராகிங்!) பலரும் கூடியிருந்த அந்த இடத்தில், ‘பாரதி சின்னப்பயல்’ என்று ஈற்றடி கொடுத்து வெண்பாப் பாடச் சொல்லிவிட்டார்.
பாடினாலும் பாடாவிட்டாலும் பாரதிக்கு இதனால் சிறுமைதான் வந்தெய்தும் என்கிற நிலை. ஆனாலும், தயங்காது பாரதி பாடிய பாடலில் காந்திமதிநாதப்பிள்ளை சின்னப்பிள்ளை ஆகி விட்டார். பாருங்கள்.  அப்பாடல் பின்வருமாறு:
ஆண்டி(ல்) இளையவ(ன்)என்(று) அந்தோ, அகந்தையினால் 
ஈண்டிங்(கு) இகழ்ந்(து)என்னை ஏளனம்செய்- மாண்பற்ற
காரிருள்போ(ல்) உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்
இப்பாடலின் ஈற்றடியை அப்படியே பாடினால், காந்திமதிநாதப்பிள்ளை தந்த தொடரும், ‘பார்அதி சின்னப் பயல்’ என்று பிரித்துப்பாடினால் பாரதியின் கவியாற்றலும் ஒருங்கே தோன்றும். 1897 அல்லது 98க்குள் நடந்த இந்நிகழ்ச்சியின்போது பாரதிக்கு வயது 14 அல்லது 15.
எழுவரை வென்ற நெடுஞ்செழியனுக்கு வயது என்ன இருக்கும் என்று ஊகித்துக் கொள்ள அக்காலத்தில் அவனைக் கண்டு பாடிய இடைக்குன்றூர்கிழாரின் பாடல் உதவி செய்யும். அந்தப்பாடல்:
“கிண்கிணி களைந்த கால் ஒண்கழல் தொட்டுக் 
குடுமி களைந்த நுதுல்வேம்பின் ஒண்தளிர் 
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, 
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி, 
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் 
யார் கொல்? வாழ்க அவன் கண்ணி! ‘தார் பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே, பால்விட்டு 
‘அயினி’யும் இன்று அயின்றனனே; (புறநானூறு-77)
பாண்டிய குலத்திற்குரிய வேம்புசூடிக் கையிலே வில்லேந்தி, தேர் ஏறி நின்றவன் அவன். சிறுவர்கள் காலில் அணியும் கிண்கிணி களைந்து வீரக்கழல் அணிந்திருக்கிறான். ஐம்படைத் தாலி அணிந்த இச்சிறுவன், பால் உணவு அருந்துவதை இன்னும் நிறுத்தியறியாப் பாலகன். ‘பால்விட்டு அயினியும் (உணவு)இன்று அயின்றவன். எவ்வளவு சிறியவன்? ஆயினும் ஆற்றலில் வலியன். சிறுமை கண்டு சீறுபவன். அதேசமயம், தான் பெற்ற வெற்றியின் காரணமாகச் செருக்கோ, ஆணவமோ சிறிதும் இல்லாத ஞானவான். பாரதி பாடுவாரே,

“போருக்கு நின்றிடும்போதும்- உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்”
என்று ‘உயிர்பெற்ற தமிழர்பாட்டில்’! அப்படி ஒரு ஞானம் வந்தெய்திய வீரக்குழந்தையாக அப்பாண்டியச் சிறுவன் ஒளிர்கிறான். தொடர்ந்து இடைக்குன்றூர்கிழார் பாடலைப் பாருங்கள்.
“.................  வயின் வயின்
உடன்றுமேல்  வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே’ ‘அவரை
அழுங்கப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பு எழக்
கவிழ்ந்து நிலம்சேர அட்டதை’
மகிழ்ந்தன்றும் இகழ்ந்தன்றும் அதனினும் இலனே’ (புறநானூறு-77)
எத்தகு தெளிவு, சிறுவன் நெடுஞ்செழியப் பாண்டியன் தோற்றத்தில்!
‘பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ (புறநானூறு-192)
என்னும் கணியன்பூங்குன்றனின் கவியுளத்தைச் செயலில் காட்டிய செம்மையாளனாகத் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் திகழ்வதைப் பார்க்கலாம்.
பாரதி மட்டும் என்னவாம்?
திருநெல்வேலியில், காந்திமதிநாதப்பிள்ளையை, ‘பார்அதி சின்னப்பயல்’ என்று காட்டியபோது, சுற்றியிருந்தோர் எழுப்பிய ஆரவாரத்தில், பாராட்டில், அவர்தம் சின்னத்தனம் வெளிப்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட எளிமை கண்டு இரங்கி, அடுத்த கணமே, அந்த ஈற்றடி கொண்டே பின்வருமாறு பாடித் தம்மைத் தகுதியாளராய் நிலைநிறுத்திக்கொண்டாரே! அந்தப் பாடலும் பின்வருமாறு:
“ஆண்டி(ல்) இளையவ(ன்) என்(று)ஐய, அருமையினால்
ஈண்(டு)இன்(று) என்றன்னைநீ ஏந்தினையால்- மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்”
அகந்தையை, அன்பினால் வென்ற அருமையினால், இகழ்ந்து ஏளனம் செய்த மாண்பற்ற நிலைமாற்றி  காந்திமதிநாதப்பிள்ளையை, மாண்புற்றவராய் மாற்றி, ஆண்டில் இளைய பாரதி அவருக்குச் சின்னப்பயல் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறார். இந்தப் பெருந் தன்மையைப் பாரதியின் பாடல்களில் பல இடங்களில் பார்க்கமுடியும். சான்றுக்கு ஒன்று.
தனக்கு மட்டுமன்றித் தமிழுக்கு என்றபோதும் அவ்வண்ணமே அறச்சீற்றத்தோடு எழுந்தவர் பாரதியார். அவர் காலத்தில், ‘மெல்லத் தமிழ்இனிச்சாகும்’ என்று கூறத் தகாதவன் கூறிய தொடர்கேட்டுத் தமிழன்னையாகவே கனன்று எழுந்து, நெடுஞ்செழியனைப்போல் வஞ்சினம் மொழிகிறார் பாரதி. தமிழன்னை பாடுகிறாள்:

“இன்றொரு சொல்லினைக் கேட்டேன்:- இனி
ஏதுசெய்வேன்? என தாருயிர் மக்காள்,
கொன்றிடல் போல்ஒரு வார்த்தை -இங்குக்
கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்,
‘புத்தம் புதிய கலைகள்- பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே- அந்த
மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை;
சொல்லவும் கூடுவதில்லை- அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை;
மெல்லத் தமிழ்இனிச் சாகும்- அந்த
மேற்குமொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான்’
 இப்பாடலில் பேதை என்றும் கூறத்தகாதவன் என்றும் அவர் குறிப்பிடுவது, ‘சென்னை பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவரை” (பாரதி பாடல்கள், ப.531) பணியில், பதவியில் பெரியவர் ஆயினும் பண்பாட்டுத்தளத்தில், அவர் விடுத்த வாய்ச்சொல் பாரதியைத் தமிழன்னையாகிக் கிளர்ந்தெழ வைத்துவிடுகிறது. அவரே அன்னைநிலையில் இருந்து பின்வருமாறு வஞ்சினம் மொழிகிறார்.
“தந்தை அருள்வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்- புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்!”
அப்படியே கவிவாக்குப் பலித்துவிட்டதே!
உலகுபோற்றும் பெருங்கவியாகப் பாரதியாரும் உலகு கற்கும் திருமொழியாகத் தமிழும் உயர்ந்து புகழ்ஏறிப் புவிமிசை என்றும் இருப்பது வரலாற்று உண்மை. 
சிறுமை கண்டு பொங்கியும் எளிமை கண்டு இரங்கியும், போருக்கு நின்றிடும்போதும் உளப்பொங்கல் இல்லாத அமைதியடு ஞானியராய்த் திகழ்ந்த மாமன்னன் பாண்டியனும் மகாகவி பாரதியும் தமிழர் வரலாற்றில் தமிழ்போல் தழைத்திருப்பவர்கள் அல்லரோ?
அந்த வரிசையில் இன்றைய இளைஞர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தமிழ் இருக்கிறது, என்றும்!
-----
முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்
முனைவர் மு.பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி

சிவகங்கை

திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப் பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுப+தி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்n;தாண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில் ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.

தேனூர்; வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டுஇ தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.

சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார்> ;செந்தில் வாழ் அந்தணர்> திருத்தணியிற்பிறந்தார்> தொண்டரடித்n;தாண்டர்> பாடாது விடுபட்டோர்> புராணிகர்கள்> முருகன் திருவருளைச் சிந்திப்போர்> முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர். >இப்புராணத்துள் ஒளவையார்> மீனாட்சி அம்மையார்> முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார்> அருணகிரிநாதர்> குமரகுருபரர்> நக்கீரர்> அகத்தியர்> கச்சியப்ப சிவாச்சாரியார்> பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.

செந்தில்வாழ் அந்தணர் சருக்கம்> கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம்> வென்றி மலைச் சருக்கம்> அரஹாரச் சருக்கம்> காவடிச் சருக்கம்> குகனேரிச் சருக்கம்> கல்லாடச்; சருக்கம்> தென்பழநிச் சருக்கம்> நின்றசீர்ச் சருக்கம்> நாரதச் சருக்கம்> வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது> அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது.

இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.

~~இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்

~றதல சேடனார்| என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்

மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்

சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே|| (1181)

என்று பாடுகின்றார்.

கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை

~~ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்

பரவசமாய் வீழ்ந்தெழுந்து

போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்

இனியென்று காண்பதென்று

சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி

படைத்த சம்பந்தாண்டன்

தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று

ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)

என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.

பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடைய+ற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது> முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்

~~ அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில் ) அதிபன் பரிவோடு அம்

புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்

இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இ;ல்லையென்னலும் இம்மா

தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்

பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்

சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்

வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்

சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்ப+றிய திதைத்தம் (2582)

என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.

குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

~~முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்

இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா

அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்

கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண்|| (1324)

என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.

இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை>அவர்களின் வாழ்வை தொண்டை சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

`